Wednesday 15 February 2012

அணுக்களும் அணுவும்



திருவள்ளுவமாலையில் இடம் பெற்றுள்ள பாடல் ஒன்றன் முதலடி,

அணுவைத் துளைத்து ஏழ்கடலைப் புகட்டிஎன்பது. 

அணுவினைச் சத கூறிட்ட கோணிலும் உளன்என்று கம்பராமாயணத்தில் படிக்கிறோம். அணுவை நூறு கூறு போட்டால் கிடைக்கிற கோண் என்ற நுண்ணிய கூறிலும் (இறைவன்) இருக்கிறான் என்பது அதன் பொருள். 

மேற்கண்ட இரு கூற்றுளும் அணுவைத் துளைக்க இயலும் என்று தமிழர் எண்ணியிருக்கின்றனர், அதன் நூறு பங்கில் ஒரு பங்குக்குக் கோண் என்று பெயரும் இட்டிருக்கின்றார்கள் என்ற தகவல்களைத் தெரிவிக்கின்றன.

அணு என்பது மிக மிகச் சிறியது என்ற அர்த்தத்தில் அணுவளவும்எனவும் அவனன்றி ஓரணுவும் அசையாதுஎனவும் சாதாரண மக்கள் கூடச் சொல்கிறார்கள். 

இதையெல்லாம் அடிப்படையாய்க் கொண்டு தமிழர்கள் அணு அறிவியலின் முன்னோடிகள் என்று முடிவு கட்டலாமா? கூடவே கூடாது. 

ஏன்? ஏனென்றால் ஆட்டம் (atom) என்று அறிவியல் கூறுகிற அணுவும் தமிழரின் அணுவும் வெவ்வேறு. 

இன்னுஞ் சொல்லப் போனால் தமிழரின் அணு ஒன்றல்ல, இரண்டு!
அவற்றுள் ஒன்று, சென்டிமீட்டர், அடி, முழம் என்பவை போல ஒரு நீட்டலளவைப் பெயர். அதன் மதிப்பு மிகச் மிகச் சிறிது, கற்பனைக்கும் எட்டாதது. ஒரு சாண் அளவைக் கிட்டத்தட்ட இரண்டரைக் கோடி(!) பாகமாகப் பிரித்தால் கிடைப்பது ஓர் அணு. 

ஒரு சாண் என்பது உசிலைமணி கையால் அளந்தாலும் 25 சென்டிமீட்டருக்கு மேல் போகாது; அங்குலக் கணக்கில் சொன்னால் பத்து அங்குலத்தைத் தாண்டாது. பத்தங்குலத்தை இரண்டரை கோடி பங்காகப் பிரிக்க முடியுமா? அப்படியே முடிந்தாலும் கிடைக்கிற, கண்ணுக்குப் புலப்படாத அணு என்ற அளவு எதையளக்க உதவும்? அதை வைத்துக் கொண்டு 150 அணு எவ்வளவு, 1000 அணு எவ்வளவு என்று மேல்வாயிலும் முக்காலணு,  வீச அணு என்று கீழ்வாயிலும் கணக்குப் போடலாமே ஒழிய, வாழ்வில் பயன்படுத்த இயலாது. 

இன்னோர் அணுவைப் பார்ப்போம். இது அளவையல்ல, பொருள், இதைத்தான் துளைத்து’, ‘சத கூறிட்டுஎன இலக்கியங்கள் கூறுகின்றன. இது கூட முழுப் பொருளல்ல. ஒரு முழுப் பொருளின் ஏறக்குறைய பதினாறைரைக் கோடியில் ஒரு பாகந்தான் இந்த அணு. துல்லியமாகச் சொன்னால்,

1 அணு = 1/16,55,80,800

மலையளவுள்ள ஒரு பென்னம்பெரிய பொருளைக் கூடக் கோடிக்கணக்கான சம கூறுகளாகப் பகுப்பது நடைமுறை சாத்தியமே அல்ல. அதில் ஒரு கூறைத் துளைப்பதும் நூறு பங்காக்குவதும் வெறுங் கற்பனை தான். 

இவ்வாறு நம் முன்னோர் கூறிய அணு இரண்டுமே அவர்களது கற்பனையில் உதித்தவை. 

இனி அறிவியல் அணுவோ வேதியியல் மாற்றத்துக்கு உட்படக் கூடிய தனிமத்தின் மிகச் சிறிய கூறு, அது வெற்றுக் கண்ணுக்குப் புலப்படாது எனினும் அதனுள்ளே கரு எலக்ட்ரான், புரோட்டான், நியூட்ரான் என்ற நுண்ணிய பொருள்கள் உள்ளன என்பது நிரூபிக்கப்பட்ட உண்மை. எந்த அணுவும் தனியாக இல்லை. வேறு அணுக்களுடன் கலந்தே காணப் படுகிறது. எல்லாத் தனிமங்களின் அணுக்களும் ஒரே மாதிரியானவை அல்ல. ஒவ்வொரு தனிமத்தின் அணுவின் அளவையும் எடையையும் அறிஞர்கள் கணக்கிட்டுள்ளனர். அணுவை அணுவுலையில் தான் பிளக்க முடியும். 

மேற்கண்டவை அறிவியல் அணுவைப் பற்றிய சுருக்கமான செய்திகள். 

தமிழரின் கற்பனை அணுக்களையும், எதார்த்தமான அறிவியல் அணுவையும் ஒன்றாகப் போட்டுக் குழப்பிக் கொள்ளக் கூடாது. ஆட்டம்என்ற ஆங்கிலச் சொல்லைத் தமிழில் அணு என்னாமல் வேறு சொல்லால் (எடுத்துக் காட்டாக இணுஎன்று) சொல்லியிருந்தால் குழப்பத்துக்கு இடமே இருந்திராது.

1 comment:

  1. பிரமிக்க வைக்கும் தகவல்களுக்கும் தெளிவு உண்டாக்கும் விளக்கங்களுக்கும் மிகவும் நன்றி.

    ReplyDelete