Wednesday 4 July 2012

அவர் சொன்னபடியே...




சூடாமணி 50 வயதுப் பெண்மணி. பருத்த உருவம் ஆயினும் சுறுசுறுப்புக்குக் குறைவில்லை. ஆன்மிகப் பழமாகிய அவர் பக்திப் பனுவல்களைப் பரவசத்துடன் பாராயணம் செய்வார். ஆசாரம், அனுஷ்டானம், நோன்பு, சம்பிரதாயம் எல்லாம் தீவிரமாய்க் கடைப்பிடிப்பார். நல்ல நாள் பார்த்துத்தான் முக்கிய செயல்களில் ஈடுபடுவார் .சோதிடத்தில் அசைக்கமுடியா நம்பிக்கை கொண்டவர். 

ஒரே மகன், மருமகளாய் வாய்த்த ஒரு குணவதி, மூவரும் ஒற்றுமையாய்ப் பாசப் பறவைகளாய் இன்ப வாழ்வு வாழ்ந்து பிற குடும்பங்களுக்கு நல்லுதாரணமாய்த் திகழ்ந்தனர்.  

துன்பம் முன்னறிவித்துவிட்டா வருகிறது? ஒரு மாலை நேரத்தில் சூடாமணியைத் தாக்கிய நெஞ்சுவலி மார்பின் இடப் பக்கம் தோன்றி இடக் கைக்குப் பரவிற்று; வியர்த்துக் கொட்டியது. 

இதயத் தாக்கு! மூவரும் புரிந்துகொண்டனர். 

"கிளம்புங்கள் உடனே! மருத்துவ வண்டியைக் கூப்பிடுகிறேன்"  

மகன் பரபரத்தான். அமைதிப் படுத்தினார் தாயார்: 

"தம்பி, நேற்று அஷ்டமி, இன்று நவமி. ரொம்பக் கெட்ட நாளுப்பா. இப்போது வேண்டாம்; விடிந்ததும் போவோம்". 

"ஒரு நிமிஷமும் தாமதம் கூடாதம்மா; இதற்கெல்லாம் நாள் பார்க்காதீங்க" 

கெஞ்சினான். எடுத்துச் சொல்லிப் பார்த்தாள் மருமகளும். 

அவர் மசியவில்லை: 

"பயப்படாதீங்க. ஜாதகப்படி நான் இன்னம் இருபது வருஷம் இருப்பேன். பகவான் கைவிடமாட்டார். பொலபொலன்னு விடியிறத்துக்கு முன்னாடி போயிடலாம்" என்று அவர் திட்டவட்டமாய்ச் சொல்லியமையால் வேறு வழியின்றிக் கைப்பக்குவம் செய்தவாறு கடவுளை வேண்டிக்கொண்டு கண்மூடாமல் காத்திருந்தனர். எப்போது விடியும் எனக் கடிகாரத்தை அடிக்கடி நோக்கிக்கொண்டிருந்தார்கள். 

முதல் தாக்குதல்தானே? ஆபத்தில்லை என்னும் எண்ணம் மகன் மனத்தில் நிறைந்திருந்தது. 

"ஐயோ!" அலறினார் அம்மா; அவ்வளவுதான், அவர் சொன்னபடியே விடியிறத்துக்கு முன்னாடி போய்விட்டது உயிர்.

No comments:

Post a Comment