Saturday 24 November 2012

ஒரு கைதியின் பயணம் ( தொடர்ச்சி )

 

கைதியிடம், "இரு" எனச் சொல்லிவிட்டு தருய் அறைக்குப் போனார். வாயிலைக் கடந்தபோது எண்ணம் மாறி ரிவால்வரை எடுத்துத் தம் பையில் திணித்தார்; பின்பு திரும்பிப் பாராமல் அறைக்குள் நுழைந்தார்.

சோபாவில் நெடு நேரம் படுத்துக்கொண்டு வானம் கொஞ்சஞ் கொஞ்சமாய் மூடுவதையும் அமைதி நிலவுவதையும் கவனித்தார்.

அவர் எழுந்தபோது வகுப்பறையிலிருந்து எந்த ஒலியும் வரவில்லை. அராபியர் ஓடியிருப்பார், எந்த முடிவும் செய்யத் தேவை இன்றி மீண்டும் தனிமையும் தாமுமாய் இருக்கப் போகிறோம் என்ற அந்த ஒரே எண்ணம் விளைவித்த மகிழ்ச்சி அவருக்கே வியப்பளித்தது. ஆனால் கைதி அங்கே இருந்தார். "வா" என்றார் தருய். அராபியர் பின்தொடர்ந்தார்.அறையில் ஒரு நாற்காலியை ஆசிரியர் அவருக்குக் காட்டினார் . அராபியர் அமர்ந்தார்.

- பசிக்கிறதா?

- ஆமாம்.

தருய் கேக் செய்து ஆம்லெட்டும் தயாரித்தார். பையில் இருந்த ரிவால்வரில் கை இடித்தது. வகுப்பறை போய் மேசையின் இழுப்பறையில் வைத்துவிட்டு வந்தார்.

இரவு கவிந்தது. விளக்கு ஏறிவிட்டுப் பரிமாறினார்.

- சாப்பிடு .

- நீ?

- உனக்குப் பின்பு சாப்பிடுவேன்.

உண்டதற்கு அப்புறம் கேட்டார்:

- நீயா நீதிபதி?

- இல்லை; நாளைவரை உன்னைக் காக்கிறேன். ஏன் அவனைக் கொன்றாய்?

- அவன் ஓடினான்; நானும் பின்னால் ஓடினேன். இப்போது என்னை என்ன செய்யப்போகிறார்கள்?

- பயப்படுகிறாயா? கழிவிரக்கம் கொள்கிறாயா?

அராபியர் ஆசிரியரை நோக்கினார்; அவருக்குப் புரியவில்லை என்பது வெளிப்படையாய்த் தெரிந்தது.

தருய் ஒரு மடக்குக் கட்டிலை விரித்து," படுத்துக்கொள். இது உன் கட்டில்" என்றார்.

- பட்டாளத்தார் நாளை வருவாரா?

- தெரியாது.

- எங்களுடன் நீ வருகிறாயா?

- தெரியாது; ஏன்?

- எங்களுடன் வா.

நள்ளிரவு ஆகியும் தருய் தூங்கவில்லை. முன்னமே கட்டிலில் படுத்துவிட்டார். தயக்கமாய் இருந்தது: தாக்குதலுக்கு ஆளாகலாம் என உணர்ந்தார். பின்பு தோள்களைக் குலுக்கிக்கொண்டார். விளக்கை அணைத்தபோது இருள் உடனடியாய் இறுகினாற்போல் தோன்றிற்று.

கொஞ்ச நேரத்துக்குப் பின் அராபியர் லேசாய் அசைந்தபோது ஆசிரியர் விழித்துத்தான் இருந்தார் . கைதியின் இரண்டாம் அசைவு கண்டு எச்சரிக்கை கொண்டார். அவர் மெதுவாய் எழுந்து சிறிதுஞ் சந்தடி செய்யாமல் கதவை நோக்கி நடந்து தாழ்ப்பாளை ஓசையின்றி நீக்கித் திறந்து வெளியேறினார்.

"நழுவுகிறான், சங்கடம் தீர்ந்தது" என்று தருய் நினைத்தார். சிறிது நேரத்தில் அராபியர் உள்ளே வந்து கவனமாய்க் கதவைச் சாத்திவிட்டு ஓசையின்றிப் படுத்துக்கொண்டார். அப்போது தருய் மறுபக்கம் திரும்பி உறங்கினார்.

பின்பும் ஒரு தடவை ஆழ்ந்த தூக்கத்தினிடையே பள்ளியைச் சுற்றித் திருட்டுத்தனமான காலடி ஒலிகள் கேட்டதாய்த் தோன்றிற்று. "கனவு, கனவு" எனச் சொல்லிக்கொண்டே தூங்கினார்.

விழித்தபோது வானம் தெளிந்திருந்தது. இருவரும் ரொட்டி தின்று காப்பி பருகினர்.

ஆசிரியர் வெளியில் போனார். நீல வானில் சூரியன் ஏறியிருந்தான். அராபியரின் முட்டாள்தனமான குற்றம் அவருக்கு வெறுப்பூட்டியது; ஆனால் அவரை ஒப்படைப்பது தம் கெளரவத்துக்குப் பாதகம். அராபியரைத் தம்மிடம் அனுப்பிய தம்மவரையும் கொல்லத் துணிந்த ஆனால் தப்பியோட அறியா இந்த ஆளையும் ஒரே சமயத்தில் சபித்தார். பள்ளியுள் நுழைந்தார். அறைக்குள் சென்று ரஸ்க் ரொட்டி, பேரீச்சை, சீனி ஆகியவற்றை ஒரு பார்சலாக்கினார். இருவரும் வெளியேறும் முன்பு, ஆசிரியர் வகுப்பறையில் மேசைக்கெதிரில் ஒரு நொடி தயங்கி நின்றுவிட்டு வாயிலைத் தாண்டிக் கதவைப் பூட்டினார்.

"இந்தப் பக்கமாய்" என்று சொல்லிக் கிழக்கு நோக்கி நடந்தார், கைதி பின்தொடர. ஒரு மணி நேரத்துக்குப் பிறகு சிறிது இளைப்பாறி மேலும் ஒரு மணி நேரம் நடந்தனர். தருய் பார்சலை அராபியரிடம் அளித்தார்: "எடுத்துக்கொள்; பேரீச்சை, ரொட்டி இருக்கிறது; இரண்டு நாளுக்குத் தாக்குப் பிடிக்கலாம். இதோ ஆயிரம் பிரானும்" அராபியர் பெற்றுக்கொண்டார்.

கிழக்குத் திக்கைக் காட்டி ஆசிரியர் கூறினார்: "இதுதான் தைங்கித்துக்குப் போகிற பாதை. இரண்டு மணி நேரம் நடக்கவேண்டியிருக்கும். அங்கே அரசும் காவல்துறையும் உனக்காகக் காத்திருப்பார்கள்."

அவரைத் தெற்கு நோக்கித் திருப்பி, "அதோ அது பீடபூமியைக் கடக்கும் அடிச்சுவடு. ஒரு நாள் நடந்தபின் நாடோடிகளைக் காண்பாய்; அவர்கள் உன்னை வரவேற்று அவர்களின் சட்டப்படி உனக்குப் புகலிடம் அளிப்பார்கள்" என்றார்.

அராபியர் தருய் பக்கம் திரும்பினார் முகத்தில் ஒருவித பீதி படர்ந்தது . " நான் சொல்வதைக் கேள் " என்றார் .

தருய் தலையை ஆட்டி, " வேண்டாம், ஒன்றுஞ் சொல்லாதே . இப்போது உன்னைவிட்டு நான் போகிறேன்" எனக் கூறிவிட்டுப் பள்ளியை நோக்கி இரண்டு பெரிய அடி வைத்து அசையாமல் நின்றிருந்த அராபியரைத் தயக்கத்துடன் பார்த்துவிட்டுப் புறப்பட்டார். நீண்ட தொலைவுக்குப் பின்தான் திரும்பிப் பார்த்தார்.குன்றின்மீது யாருமில்லை; தருய் தயங்கினார்; திரும்பி வந்தார். சிறைக்குப் போகுஞ் சாலையில் மெதுவாய் நடந்துகொண்டிருந்த அராபியரைக் கனத்த இதயத்துடன் கண்டார்.

பிற்பாடு பள்ளிச் சன்னலின் எதிரே நின்றபடி வானின் உச்சியிலிருந்து பீடபூமியின் முழுப் பரப்பிலும் வீழ்ந்துகொண்டிருந்த வெளிச்சத்தை மேலோட்டமாய்ப் பார்த்தார். அவருக்குப் பின்புறம் கரும்பலகையில் , பிரஞ்சு ஆறுகளின் வளைவுகளுக்கு இடையே, திறமை குறைந்த கையொன்றால் எழுதப்பெற்றிருந்தது ஒரு சுண்ணக்கட்டி வாசகம்:

"எங்கள் சகோதரனை நீ ஒப்படைத்துவிட்டாய்; விலை கொடுப்பாய்"

அதைச் சற்று முன்தான் தருய் வாசித்திருந்தார்.

(முற்றும்) 

Friday 9 November 2012

ஒரு கைதியின் பயணம்

 


Albeert Camus - அல்பேர் கமுய் -1913 / 1960 - இலக்கியத்துக்கான நோபெல் பரிசைப் பெற்ற பிரஞ்சு எழுத்தாளர் ( 1957 ).

பிரான்சின் காலனியாய் இருந்த அல்ஜீரியாவில் பிறந்து வளர்ந்தவர். பத்து ஆண்டுக்குமேல் நீடித்த போராட்டத்தின் விளைவாய் அந்நாடு விடுதலை அடைந்தது.

அவர் 1957 இல் இயற்றிய ஒரு சிறுகதை "விருந்தாளி" என்ற தலைப்புடையது; இதை நான் பிரஞ்சிலிருந்து மொழிபெயர்த்தேன். முழுப் பெயர்ப்பும் 2012 ஆகஸ்ட் மாத "மஞ்சரி" இதழில், "ஒரு கைதியின் பயணம்" என்னும் தலைப்பில் வெளிவந்தது. சுருக்கமான பெயர்ப்பை மன்றத்தில் பதிகிறேன்.

கதை அல்ஜீரியாவில் நிகழ்கிறது.



இருவரும் தம்மை நோக்கி ஏறி வருவதை ஆசிரியர் பார்த்துக்கொண்டிருந்தார்: குதிரை மீது ஒருவர், கால்நடையாய் மற்றவர். குன்றின் ஓர் ஓரத்தில் கட்டியிருந்த பள்ளிக்கூடத்துக்கு இட்டுச் செல்லும் பாதையை அவர்கள் இன்னம் அடையவில்லை. உயரமான மற்றும் வறண்ட அந்தப் பரந்த பீடபூமியில் இருந்த கற்களின் இடையே, பனித்தரையில், அவர்கள் சிரமத்துடன் மெதுவாய் முன்னேறினார்கள்.

பகல் இரண்டு மணி. காலை இப்போதுதான் தொடங்குகிறது என்று சொல்லலாம்போல் இருந்தது. ஒரே குளிர்! கம்பளிச் சட்டையை எடுக்கப் பள்ளிக்குள் நுழைந்தார். காலியாயும் சில்லெனவும் இருந்த வகுப்பறையைக் கடந்தார். கரும்பலகையில் வெவ்வேறு நிறச் சுண்ணக் கட்டிகளால் வரைந்த பிரான்சின் ஆறுகள் நான்கும் கழிமுகம் நோக்கி மூன்று நாளாய் ஓடிக்கொண்டிருந்தன. எட்டு மாத வறட்சிக்குப் பின்பு, இடையில் பெய்யவேண்டிய மழை பொய்த்து, அக்டோபர் பாதியில் பனி கடுமையாய்ப் பொழிந்தது. பீடபூமியில் சிதறிக் கிடந்த சிற்றூர்களின் இருபது மாணவர்களும் நின்றுவிட்டார்கள்.

வகுப்பறைக்குப் பக்கத்திலிருந்த தமது ஒற்றையறை வசிப்பிடத்தை மட்டும் சூடேற்றிவிட்டு தருய் வெளியே வந்தார். இருவரும் பாதி ஏறிவிட்டனர். தாம் நெடுங்காலமாய் அறிந்திருந்த முதிய பட்டாளத்தார் பல்துய்க்சிதான் குதிரை ஊர்கிறார் என அடையாளங் கண்டார். பல்துய்க்சி, தமக்குப் பின்னால், கைகள் கட்டப்பட்டுத் தலை குனிந்து நடந்த ஓர் அராபியரைப் பிணித்த கயிற்றைக் கையில் பற்றியிருந்தார்.

கூப்பிடு தொலைவில் வந்ததும் அவர் கத்தினார்: "ஒரு மணிநேரம் எல் அமரிலிருந்து மூன்று கிலோமீட்டர் நடந்துவர!"

அவர்கள் வந்ததும், தருய், "சலாம், உங்களைச் சூடுபடுத்திக்கொள்ள உள்ளே வாருங்கள்" என்றார்.

பல்துய்க்சி சோபாவிலும் அராபியர் கணப்பின் அருகே தரையிலும் உட்கார்ந்தனர்.

"புதினா டீ போட்டுத் தருவேன்" என்று ஆசிரியர் சொல்ல, பல்துய்க்சி, "நன்றி. என்ன மாதிரியான வேலை! சீக்கிரமே ஓய்வு பெற முடியும் என நினைக்கிறேன்" என்றார்.

அராபியர்க்கும் டீ கிளாசை நீட்டிய தருய், அவரது கைக்கட்டைப் பார்த்து, "அவிழ்த்துவிடலாம் என நினைக்கிறேன்" என்றதற்குப் பல்துய்க்சி, "நிச்சயமாக; பயணத்துக்குத்தான் அது" என்று பதில் சொன்னார்.

- சரி; இப்படி எங்கே போகிறீர்கள் நீங்கள்?

- இங்கே, மகனே.

- விந்தையான மாணவர்கள்! இங்கு இரவைக் கழிப்பீர்களா?

- இல்லை; நான் திரும்பிப் போகிறேன். நீ இந்த ஆளைத் தைங்கித்தில் ஒப்படைப்பாய்: அங்கே இவனுக்காகக் காத்திருப்பார்கள்.

- என்ன கதையிது? என்னைக் கிண்டல் பண்ணுகிறாயா?

- இல்லை, மகனே, கட்டளை.

- கட்டளையா? நான் என்ன...

தருய் தயங்கினார்; முதியவரின் மனத்தைச் சங்கடப்படுத்த அவர் விரும்பவில்லை. "இருக்கட்டும், இது என் வேலை அல்ல" என்று முடித்தார்.

- என்னது? இதற்கென்ன அர்த்தம்? போரில் எல்லா வேலையும் செய்யவேண்டும். கட்டளை போட்டிருக்கிறார்கள்; அது உன்னையும் கட்டுப்படுத்தும். எதுவோ நடப்பதாகத் தெரிகிறது. புரட்சி வெடிக்கப்போகிறது என்கிறார்கள்; ஒரு வகையில் பார்த்தால் நாம் அணிவகுப்பில் இருக்கிறோம்.

தருயின் எதிர்ப்பு முகபாவம் நீடித்தது.

பல்துய்க்சி கூறினார்: "கேள் மகனே, நான் உன்னை நேசிக்கிறேன். நீ புரிந்துகொள்ளவேண்டும். எல் அமரில் பெரிய பிரதேசமொன்றில் ரோந்துப்பணி ஆற்ற நாங்கள் ஒரு டஜன் பேர் இருக்கிறோம். நான் போகவேண்டும். இந்த வரிக்குதிரையை உன்னிடம் ஒப்படைத்துவிட்டுத் தாமதம் இல்லாமல் வந்துவிடும்படி என்னிடம் சொல்லியிருக்கிறார்கள். இவனை அங்கே வைத்திருக்க முடியவில்லை. கிராமம் கிளர்ச்சி செய்தது, இவனை மீட்க விரும்பினார்கள். நாளை பகலில் இவனைத் தைங்கித்துக்கு நீ அழைத்துப் போகவேண்டும். உன்னைப் போன்ற பலசாலிக்கு ஒரு இருபது கிலோமீட்டர் பயம் தராது. அப்புறம், எல்லாம் முடிந்துவிடும். உன் மாணவர்களையும் இன்ப வாழ்க்கையையும் நீ மறுபடி பெறுவாய்.

- இவன் என்னதான் செய்தான்?

பட்டாளத்தார் வாய் திறக்கும் முன்பே, "பிரஞ்சு பேசுகிறானா?" எனவும் தருய் வினவினார்.

- ஊகூம், ஒரு வார்தைகூட இல்லை. ஒரு மாதமாய்த் தேடினோம்; மறைத்து வைத்திருந்தார்கள். மச்சானைக் கொன்றுவிட்டான்.

- நமக்கு எதிரியா?

- நான் அப்படி நினைக்கவில்லை; ஆனால் உறுதியாக ஒருபோதும் சொல்லமுடியாது.

- ஏன் கொன்றான்?

- குடும்பத் தகராறு என்று நினைக்கிறேன்.

தருய் மீண்டும் டீ தந்தார்.

- நன்றி, அன்பனே. இப்போது நான் போகிறேன்.

பட்டாளத்தார் எழுந்து அராபியரை நோக்கிச் சென்றார், பையிலிருந்து ஒரு கயிற்றை இழுத்தபடி.

- என்ன செய்கிறாய்?

வெறுப்புடன் கேட்டார் ஆசிரியர்; வியப்புற்ற பல்துய்க்சி கயிற்றைக் காட்டினார்.

- தேவையில்லை.

பட்டாளத்தர் தயங்கினார்:

- உன் விருப்பம். ஆயுதம் வைத்திருக்கிறாய் அல்லவா?

- வேட்டைத் துப்பாக்கி இருக்கிறது.

- எங்கே?

- பெட்டியில்.

- கட்டிலருகே வைத்திருக்க வேண்டும்.

- ஏன்? நான் பயப்படுவதற்கு ஒன்றுமில்லை.

- கிறுக்கனாய் இருக்கிறாய், மகனே. அவர்கள் கிளர்ந்தெழுந்தால் யாருக்கும் பாதுகாப்பு இருக்காது. நம் எல்லாருக்கும் ஒரே கதி.

- நான் என்னைக் காத்துக்கொள்வேன். அவர்கள் வருவதைத் தெரிந்துகொள்ள எனக்கு நேரம் இருக்கும்.

- உனக்கு நேரம் இருக்குமா? நல்லது; அதுதான் நான் சொன்னது; நீ எப்போதும் கொஞ்சம் கிறுக்காய்த்தான் இருந்திருக்கிறாய். அதற்காகவே எனக்கு உன்மேல் அதிக அன்பு; என் மகன் இப்படியிருந்தான்.

தம் ரிவால்வரை மேசைமீது வைத்து, "இதை எடுத்துக்கொள்; இங்கிருந்து எல் அமர் போக இரண்டு ஆயுதம் எனக்குத் தேவையில்லை" என்றார்.

- கேள், பல்துய்க்சி, இதெல்லாம் எனக்கு வெறுப்பூட்டுகிறது. இவனை ஒப்படைக்கமாட்டேன்.

- மடத்தனம். எனக்குக்கூடத்தான் பிடிக்கவில்லை ஒரு மனிதனைக் கயிற்றால் கட்டுவது. எத்தனையோ ஆண்டுகள் அப்படிச் செய்தும் பழகிப்போகவில்லை; சொல்லப்போனால், ஆமாம், வெட்கமாக இருக்கிறது; ஆனால் அவர்களை அவர்கள் போக்கில் விடமுடியாது.

- ஒப்படைக்க மாட்டேன்.

- இது உத்தரவு, மகனே, மீண்டும் சொல்கிறேன். நீ இப்போது தாளில் கையெழுத்து போடப்போகிறாய்.

தருய் கையொப்பம் இட்ட தாளைப் பட்டாளத்தார் கவனமுடன் மடித்துக் கைப்பையில் வைத்துக்கொண்டு கதவை நோக்கி நடந்தார். "போய் வருகிறேன், மகனே" என்றார். அவருக்குப் பின்னால் கதவு மூடிற்று.
 

( தொடரும்)