Thursday 9 May 2013

ஐம்பெருங் காப்பியம்


 


சிலப்பதிகாரம், மணிமேகலை, சீவக சிந்தாமணி, வளையாபதி, குண்டலகேசி ஆகியவை ஐம்பெருங்காப்பியம் என்கிறோம். இந்தச் சொற்றொடரை உருவாக்கியவர் மயிலைநாதர் (14 ஆம் நூற்றாண்டு); இவர் இலக்கண நூலாகிய நன்னூலுக்கு உரை எழுதி இருக்கிறார்; அந்த உரையில்தான் "ஐம்பெருங்காப்பியம், எண்பெருந்தொகை, பத்துப்பாட்டு, பதினெண்கீழ்க்கணக்கு" என அவர் குறிப்பிட்டுள்ளார். அந்தச் சொற்றொடர்களையே நாம் பன்னெடுங்காலமாய்த் திருப்பிச் சொல்லிவருகிறோம்; எண்பெருந்தொகை மட்டும் எட்டுத்தொகை என்று சுருங்கிவிட்டது. 

அப்படி உரைத்த மயிலைநாதர் ஐம்பெருங்காப்பியம் இவை இவை எனச் சுட்டிக் காட்டவில்லை. 

பின்பு தோன்றிய "தமிழ்விடு தூது" என்னும் சிற்றிலக்கியமும், "கற்றார் வழங்கு பஞ்ச காப்பியமும்" என்றதே ஒழிய விரித்துரைக்கவில்லை. 

கந்தப்ப தேசிகர்தான் (19 ஆம் நூ.) தாம் இயற்றிய திருத்தணிகை உலாவில் காப்பியங்களின் பெயர்களைக் குறிப்பிட்டார்: 

சிந்தா மணியாம் சிலப்பதிகா ரம்படைத்தான்
சுந்தர மணிமே கலைபுனைந்தான் --- நந்தா
வளையா பதிதருவான் வாசகனுக்கு ஈந்தான்
திளையாத குண்டல கேசிக்கும் ............... 

என்பது அவரது செய்யுள். இவற்றைத்தான் மயிலைநாதர் மனத்தில் எண்ணினாரா என்பது தெரியவில்லை. இவற்றுள் வளையாபதியில் 66 பாக்களும் குண்டலகேசியில் 224 பாக்களும் மட்டுமே கிடைத்துள்ளன. 

சிறு காப்பியங்களுள் ஒன்றாக வைத்து எண்ணப்படுகிற சூளாமணி, பெருங்காப்பியம் என்னும் பெயர்க்குப் பொருத்தமானது எனத் திறனியர் கூறுகின்றனர். 

வடமொழியிலும் ஐங்காவியம் (பஞ்ச காவ்யம்) உண்டு. அவை: நைடதம், கிராதார்ச்சுனீயம், ரகுவம்சம், குமார சம்பவம், சிசுபால வதம்.

3 comments:

  1. ஐம்பெருங்காப்பியங்கள் பற்றி அறியத்தந்தமைக்கு மிக்க நன்றி. இன்று என்னையும் சேர்த்து பலருக்கும் இவை பெயரளவில் மட்டுமே தெரிந்திருப்பது வருத்தம் தரும் செய்தி. வடமொழியிலும் உள்ள பஞ்சகாவ்யம் பற்றி இன்று அறிந்துகொண்டேன்.

    ReplyDelete
  2. விளக்கங்களுக்கு நன்றி ஐயா...

    ReplyDelete
  3. வளையாபதியில் 66 பாக்களும் குண்டலகேசியில் 224
    பாக்களும் மட்டுமே கிடைத்துள்ளன.//
    மற்றவை?இலக்கிய இலக்கியங்கள் மனதை இளமையாக்கவும் செய்கின்றன.
    உங்களின் தகவல்என்னை மகிழ்சிக் கொள்ள செய்கிறது

    ReplyDelete