மறு - அடுத்த நாள், பெண் வீட்டுக்கு மணமக்கள் செல்வார்கள்: அதற்கு மறு என்று பெயர். மணமக்களுடன் மாப்பிள்ளையின் உறவுக் குடும்பம் ஒன்றும் போகும். ஒரு நாளாவது தங்கிபின், திரும்புவார்கள்; இப்போது பெண்ணுக்குச் சொந்தக்காரக் குடும்பம் வரும்.
ஒவ்வொரு தடவையும் வெவ்வேறு உறவினர்கள் பயணிப்பார்கள்.
இதன் காரணமாய் மணமகளின் ஊர், வீடு, அக்கம்பக்கம் வாழ்வோர் ஆகியோரை மாப்பிள்ளை வீட்டாரும், இவர்களையும் சார்ந்தோரையும் பெண் வீட்டாரும், நன்கு அறிந்துகொள்வார்கள். அன்றுடன் உறவினர்கள் விடை பெற்றுச் செல்வார்கள்; மூன்றாம் மறுவுக்குப் பின்பு யாரும் இருக்கமாட்டார்கள்.
இக்காலத்தில் மாப்பிள்ளை ஓர் ஊர், பெண் வேறு ஊர், மணம் நடைபெறுவது இன்னோர்
ஊரின் மண்டபத்தில்; இந்த மண்டபம் மட்டுமே எல்லார்க்கும் தெரியும்.
இன்னமும் வேலை -- இரவல் வாங்கி வந்த பொருள்களை
உரியவரிடம் திரும்பக் கொண்டுபோய்க் கொடுக்க வேண்டாமா?
சில பொருள்கள் காணாமல் போயிருக்கும்; இழப்பீடு தரவேண்டும். இந்த வேலையும் முடிந்துவிட்டால், " அப்பாடா!" என்று ஆசுவாச மூச்சு விடலாம். சிலர் இரவு முழுதும் உறங்காமல் வேலை செய்திருப்பர்.
திருமண வேலைகள் அவ்வளவு சிரமம் பயப்பன;
ஊர் கூடித் தேர் இழுப்பதுபோல் உறவினர்
பலர் சேர்ந்து முழு ஈடுபாட்டுடன் பல நாள் உழைத்தல் இன்றியமையாதது. ஆகவே
தான் "கல்யாணம் பண்ணிப் பார்"
என்ற பழமொழி பிறந்தது.
தற்காலத்தில் பணம் இருந்தால் போதும்:
எல்லா வித வேலைகளையும் செய்து தரப் பல குழுக்கள் ஆயத்தமாக இருக்கின்றன; மண்டபங்களில் வசதியாக அமரவும் யாவரும்
ஒரே நேரத்தில் உண்ணவும் முடிகிறது. வரவேற்கத்தக்க பெரிய முன்னேற்றம் தான். ஆனால் உறவு நெருக்கமும் அதனால் விளைந்த மனக் கலப்பும் மகிழ்ச்சியும்
மறைந்து போயின.
ஒருபுறம் லாபம் மறுபுறம் இழப்பு: இதுதானே வாழ்க்கையின் இயல்பு?
(முடிந்தது)
++++++++++++++++++++++++++++
(படங்களுக்கு நன்றி- கூகுள்)