Monday 25 November 2013

பழைய விளையாட்டுகள் - நொண்டிக் கோடு

பழைய விளையாட்டுகள் -- 1
    நொண்டிக் கோடு

இன்றைய சிறுவர்கள்,  இளைஞர்கள் பொது இடங்களில் ஆடும் விளையாட்டு ஒன்றே ஒன்றுதான்: கிரிக்கட்;  அதுவும் எப்போதாவது.
   
சுமார் எழுபத்தைந்து ஆண்டுக்கு முன்பு, தெருக்களில் நாள்தோறும்,  பலப் பல விளையாட்டுகள் ஆடப்பட்டன. தொலைக் காட்சிகாணொளி (வீடியோ) ஆட்டங்கள்,  ஏன்,  வானொலிகூடத் தோன்றாத காலம்ஊர்திகள் அதிகம் செல்லாத காரணத்தால், காலியாகக் கிடந்த மண் தெருக்களில்  இறங்கி விளையாடிப் பொழுது போக்க வேண்டிய கட்டாயம் அந்த விளையாட்டுகளை ஊக்குவித்தது.
   
மறைந்து போன அவற்றுள் ஐந்தை இன்றைய இளைய தலைமுறைக்கு அறிவிக்கவே இக்கட்டுரை எழுதுகிறேன்.

1 -- நொண்டிக் கோடு


  
தெருவின் குறுக்கே,  ஒரு புறத்திலிருந்து மறு புறம் வரையிலும், காலால் ஓர் அகலமான கோடு கிழித்து, கொஞ்ச தொலைவில் அதற்கு இணையாக  (parallel) இன்னொரு கோடு கிழிப்பர்;  இவற்றை இணைத்து இரண்டு கோடுகள் போட்டுவிட்டால், நான்கும் சேர்ந்து ஒரு பெரிய சதுரத்தைத் தோற்றுவிக்கும். இதுதான் ஆடுகளம். (இடம் போதாவிடில் நீள்சதுரக் களம் அமைக்கலாம்).
     
ஆட்டக்காரர்கள் இரண்டு அணியாய்ப் பிரிவார்கள். மொத்தம் எட்டுப் பேர் எனக் கொள்வோம்: ஓர் அணியினர் ஆடுகளத்துள் நுழைவர்மற்றவர் வெளியில் அமர்வர். இவர்களுள் ஒருவர் மட்டும் எழுந்து, நொண்டியபடி  சதுரத்துள் நுழைந்து எதிரிகளைக் கையாலோ தூக்கிய திருவடியாலோ  தொடவேண்டும்; அகப்பட்டவர் வெளியேறுவார். காலை மாற்றாமல் நொண்ட வேண்டும்; களைத்துப் போயோ தவறுதலாகவோ காலைத் தரையில் ஊன்றிவிட்டால், "காலை உட்டான்" என்ற கூச்சல் எழும்;   வெளியே வந்துவிட வேண்டியதுதான். இன்னொருவர் நுழைவார்.
  
உள்ளிருப்பவர் கோட்டை மிதித்தால் அல்லது கடந்தால் வெளியேற வேண்டும். உள்ளே இருக்கிற நால்வரையும் தொட்டுவிட்டால் வெற்றி; ஒருவர் பாக்கி இருந்தாலும் தோல்வி.
          
இரு சாராரும் வியர்த்து சோர்ந்து விறுவிறுத்துப் போவார்கள். உடலுக்கு அருமையான பயிற்சி.
   
அடுத்த ஆட்டத்தில் அணிகள் இடம் மாறும்.
   
உள்ளேயிருப்பவர், சிக்காமல் இருக்க, ஒரு திசையில் கொஞ்ச தூரம்  விரைவாய் ஓடித்  திடீரெனத் திரும்பி எதிர்த் திசையில் ஓடுவார். அதற்கு "வெட்டுதல்" என்று பெயர். அப்படி வெட்டும்போது, கால் சர் எனச் சறுக்கிக்கொண்டு அரை மீட்டர் வரைகூட போகும்வெட்டுதலில் வல்லவர்கள் பலர் இருந்தனர்; அவர்களைத் தொடுதல் மிக அரிது. வெட்டித் திரும்புவதை எதிர்பார்த்திராத  நொண்டிக்காரர் நிலை தடுமாறிக் காலை "உட்டுடுதல்" சகஜம்.
  
எதிர்த் தரப்பிலும் திறமைசாலிகள் இருப்பார்கள்;  எட்ட எட்டக் காலை ஊன்றிச் சென்றுஒருவரை மட்டுமல்ல, இருவரைக்கூடத் தொட்டுவிட வல்ல அபாரக் கில்லாடிகள்!
   
நொண்டுபவர் அவரையும் இவரையும் மாறிமாறித் துரத்துவது வீண் முயற்சியாய் முடியும். ஒருவரை மாத்திரம் குறி வைத்து அவரை விரட்டிக் களைக்கச் செய்து தொடப் பார்ப்பதே சரியான உத்தி. இது, "ஒருத்தரைக் கரவம் கட்டுதல்" எனப்படும். அவரைத் தொட இயலாமற் போனாலும் சோர்ந்திருக்கிற அவர்,   அடுத்த நொண்டிக்காரரிடம் எளிதில்  சிக்குவார்.
   
சிறுமிகளும் இதை ஆடுவது உண்டு.

   =======================================================

Monday 18 November 2013

பெரியம்மையும் காலராவும்





 உலகின் மிகப் பழைய பத்து நோய்களுள் பெரியம்மையும் காலராவும் இரண்டு. அவை கொள்ளை நோய்கள், அதாவது,  அவ்வப்போது திடுதிப்பெனத் தோன்றி,  மளமளவெனப் பரவி,  நிறையப் பேரைப் பலி வாங்குகிற பிணிகள்.

 1940 க்கு முன்பு, அவை இரண்டும் தமிழகத்தைச் சிம்ம சொப்பனமாய் நடுங்கச் செய்தன.

 அவை நோய் என்று அறியாத மக்கள், மாரியம்மனும் காளியம்மனும் மனிதர்மீது கொண்ட கோபத்தினால், அவர்களைத் தன்டிப்பதற்காக அவற்றை ஏவிவிடுகிறார்கள் என நம்பினார்கள்.

 அம்மையின் அறிகுறிகள்: உடல் முழுதும் கடுமையான வலி, காய்ச்சல், தலை வலி,  முகத்தில் கொப்புளங்கள். இக்கொப்புளங்கள் சிறிதுசிறிதாக மார்பிலும் உடம்பின் கீழ்ப்பாகத்திலும் தோன்றும்;  அம்மை இறங்குகிறது என்பர். பின்பு அறவே மறையும். கொப்புளங்களில் நமைச்சல் ஏற்படும்; சொரியக்கூடாது;  வேப்பிலைக் கொத்தால் இப்படியும் அப்படியும் தடவுவார்கள். கொப்புளம் என்று சொன்னால் சாமி கோபிக்கும் என அஞ்சி "முத்து" என்பர். "முத்து போட்டிருக்கு" என்றால் அம்மைக் கொப்புளங்கள் கிளம்பியுள்ளன என்பது பொருள்.

 முதல் நோய்க்கு மாரியம்மனின் பெயரையே சூட்டி, "அம்மை" என்றனர்; அம்மை என்றால் அன்னை என்று அர்த்தம். பெரியம்மை,  சின்னம்மை, விளையாட்டு அம்மை,  மணல்வாரி அம்மை,  நீர்கொள்வான் என்னும் பலவகை அம்மைகளுள் பெரியம்மை மட்டுமே மிகக் கொடியது. இது தாக்கினால் பிழைப்பது மிக அரிது;  ஒருவேளை பிழைத்தாலும், கண்ணில் கொப்புளங்கள் தோன்றினால் பார்வை பறிபோகும்; முகம் முழுதும் வடுக்கள் நிறைந்து விகாரமாகும்;  அம்மி பொலிந்தாற்போல், சிறுசிறு குழிகள் உடைய அந்த முகம், "அம்மை வார்த்த முகம்" எனப்பட்டது. ஆயுள் முழுதும் அப்படியே நீடிக்கும்.

  எந்த அம்மையானாலும் மருத்துவம் செய்யக்கூடாது. செய்தால் மாரியம்மன் மேலும் சினந்து தண்டனையைக் கடுமையாக்கும். காவடி எடுக்கிறோம்,  தீ மிதிக்கிறோம் என வேண்டிக்கொள்வதும், " மாரியம்மன் தாலாட்டு" என்ற நூலைக் குடும்ப உறுப்பினர் யாராவது வாய்விட்டு வாசித்து அம்மனைச் சாந்தப்படுத்துவதும்தான் செய்யக்கூடியவை. வீட்டு வாசலின் கூரையில் வேப்பிலைக் கொத்தைச் செருகி வைப்பார்கள்;  அது, வெளியார் வரக்கூடாது என்பதற்கான அபாய எச்சரிக்கை. "சுத்தபத்தம்" (தூய்மை) இல்லாதவர்கள் வந்தால், அம்மனுடைய் கோபம் அதிகமாகும் என்பது நம்பிக்கை.

 வீட்டில் ஒருவருக்குத் தொற்றினால் மற்றவர்களையும் தாக்கும்;  ஒரு தடவை அம்மை கண்டு பிழைத்துக்கொண்டால் மறு தடவை வராது.

 மக்கள் அதிகமாய் அஞ்சியது, அம்மையை விடக் காலராவுக்கே; அது ஒரே நாளில் கொன்றுவிடும் என்பதே காரணம். அதற்கு அறிகுறி இல்லை; திடீரென வாந்தியும் பேதியும் ஏற்பட்டு உடலில் நீர் வற்றி (dehyderation) சாவு உண்டாகும். பிழைப்பது அரிதினும் அரிது. காலரா என்று சொல்லவே மக்கள் அஞ்சி, " காட்டுப் பூனை" என்றனர். குணம் அடைவதற்குக் காளியம்மனை வேண்டிக்கொள்வது தவிர வேறொன்றும் செய்வதற்கில்லை.

 இவற்றை நோய்கள் எனப் புரிந்துகொண்ட வெள்ளையர்கள் அவ்வப்போது தடுப்பு முறைகளை மேற்கொண்டார்கள்; ஆனால் சாமிகளின் கோபத்துக்குப் பயந்த மக்கள் சுகாதாரத் துறையுடன் ஒத்துழைக்கவில்லை. வீடு வீடாகச் சென்று அம்மை குத்த வருகிற அரசு ஊழியர்களிடம் சிக்காமல் பெண்களும் குழந்தைகளும் உள்ளே ஒளிந்துகொண்டு தப்புவார்கள்; அகப்பட்டவர்கள் குத்திக்கொள்வார்கள்;  அவர்களிலும் சிலர், " எனக்குக் காய்ச்சல்" என்றோ, " நான் எண்ணெய்க் குளியல் செய்திருக்கிறேன்" என்றோ ஏதாவது சாக்குப்போக்கு சொல்லி நழுவுவார்கள். விளைவு? பிணிக்குப் பலிதான்.

 பள்ளிகளில் முன்னறிவிப்பு இல்லாமல் வந்து,  அம்மை குத்தினார்கள், காலராவுக்குத் தடுப்பு ஊசி போட்டார்கள். அங்காடியில் கூட்டம் இருக்கிற நேரத்தில் திடீரெனப் போய்,  நோய்த் தடுப்புச் சிகிச்சை செய்தார்கள். எதிர்ப்பைச் சமாளிக்கக் காவலர் புடைசூழ்ந்து நின்றனர்.

 கடை கண்ணிக்குப் போகிறவர்களிடம்,  எதிரே வருகிறவர்கள், "அங்கே வளைச்சுக்கிட்டு அம்மை குத்துறான், ஊசி போடுறான்" என அபாய அறிவிப்பு தந்தவுடன்,  பெரும்பாலோர், "கடையுமாச்சு, கண்ணியுமாச்சு, தப்பிச்சால் போதும்" என்றெண்ணித் திரும்பிவிடுவார்கள்.

 பள்ளியில் சேர,  அம்மை குத்திய சான்றிதழ் கட்டாயம் ஆக்கப்பட்டதால், கல்வி கற்கும் வாய்ப்புக் கிட்டிய குழந்தைகள் அந்நோயினின்றும் காப்பு பெற்றார்கள். காலம் செல்லச்செல்ல, விழிப்புணர்வு பரவப் பரவ, தடுப்பு நடவடிக்கைகளை ஏற்றுக்கொண்டவர்களை சாமி தண்டிப்பதில்லை என்ற நிதர்சன உண்மை விளங்க விளங்க,  மக்களின் ஒத்துழையாமை படிப்படியாய்க் குறைந்தது. பெரியம்மை அறவே ஒழிந்தது; வரும் முன்னரே காலரா தடுக்கப்படுகிறது.

 இப்போது அம்மை வார்த்த முகமுடையார் யாருமில்லை; காலராவால் இறப்போர் மிக மிகக் குறைவு.

 சிறந்த முன்னேற்றம் அல்லவா?

 ++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++.

Wednesday 13 November 2013

கைகேயி



  இராமனுக்கு முடி சூட்டுவதற்கான எல்லா வித ஏற்பாடுகளும் மும்முரமாய் நடைபெற்றுக் கொண்டிருந்தபோது, யாரும் எதிர்பாரா வகையில்ஒரு திடீர்த் திருப்பத்தை ஏற்படுத்தியவள் கைகேயிஅவளைத் தூண்டியவள் அவளது ஊழியள் மந்தரை. ஆகையால்எல்லாரும் கருதிக்கொண்டிருப்பதுகைகேயி மிகப் பொல்லாதவள்சூழ்ச்சிக்காரிகணவர்மீது இரக்கங் காட்டாமல் அவர் உயிர் இழக்கக் காரணமான பாதகி என்பது. கம்பர், அவளைத் தீயவை யாவையினும் சிறந்த தீயாள்” எனப் பழித்தார்அவளுக்குத் துர்ப்போதனை செய்து, மனத்தை மாற்றிக் கெடுத்த மந்தரை யென்ற கூனியை அவர்,  “கொடுமனக் கூனி”  என்று தூற்றினார்.

  ஆனால்மாறுபட்ட கருத்து உடைய தமிழறிஞர் ச. சோமசுந்தர பாரதியார்தம் கருத்தை விளக்கி, “தசரதன் குறையும் கைகேயியின் நிறையும்” என்னுந் தலைப்பில் ஒரு நூல் இயற்றி இருக்கிறார். நூலின் உள்ளடக்கத்தைத் தலைப்பே வெளிப்படுத்துகிறது. 

 தசரதனிடத்தில் ஒரு குறை உண்டாயிற்றுஅதை நீக்கி நிறை செய்தவள் கைகேயி என்பது அவருடைய ஆராய்ச்சி முடிவு.

  கேகய மன்னனிடம் தசரதன் சென்றுஅவனது மகளாகிய கைகேயியைத்  தனக்கு மணம் முடித்துத் தரும்படி கேட்டபோதுஅவன் மறுத்தான்; அவன்  சொன்ன காரணம்:

  “முன்பே திருமணம் ஆன உனக்கு என் மகளைத் தந்தால்இவளுக்குப் பிறக்கும் மகன்ஆட்சி  உரிமை பெறமுடியாதுமூத்த மனைவியின் புதல்வனே மன்னன் ஆவான்எனவேஒரு பிரம்மச்சாரி வேந்தனுக்குக்  கைகேயியை மனைவியாக்கிஎன் பேரன் அரசன் ஆவதற்கு வழி வகுக்கத்தான் நான் விரும்புகிறேன்”.

 அப்போது தசரதன்கைகேயியின் மகனுக்குத் தனது நாட்டை ஆளும்  உரிமையைத் தருவதாக வாக்களித்து அவளை மணந்தான்.

 பின்பு,  இராமனிடம் கொண்ட அதிகப் பாசத்தால்னுக்கு முடி சூட்ட  விரும்பி அதற்கான ஏற்பாடுகளைச் செய்தான்;  பரதனுக்குத்தான் உரிமை என்ற எண்ணம் அவன் மனத்தில் உறுத்திக்கொண்டிருந்தது. ஆதலால், விழாவின்போது, பரதன் அங்கிருப்பது நல்லதல்ல என முடிவு செய்து, அவனைக் கேகய நாட்டுக்கு அனுப்பினான்.

 இராமனைத் தன் மகன்போலவே கருதி இருந்த கைகேயி, அவன்  அரியணை ஏறுவது குறித்து மகிழ்ச்சிதான் அடைந்தாள்தசரதனின் வாக்குறுதியை அறிந்திருந்த மந்தரைதக்க சமயத்தில் அதைக் கைகேயிக்கு நினைவூட்டவே, தன் கணவன் வாக்குத் தவறினான் என்ற அவப்பேர் வாங்காமல் தடுத்தாள் என சோமசுந்தர பாரதியார் விளக்கினார்.

 வால்மீகி ராமாயணத்தை ஆய்ந்து கண்ட  முடிவு இது.


    ==========================================

படம் உதவி: இணையம்

Wednesday 6 November 2013

துரியோதனன்


--- மகாபாரதத்தில் வில்லன் யார்?

--- இதென்ன கேள்வி? ஐயம் இல்லாமல்  துரியோதனன் தான்.



--- அப்படியானால்,

1 -- பாண்டவர், கெளரவர் என அனைவரும் மதித்துப் போற்றிய பெரியவர் பீஷ்மர், ஏன் போரில் துரியோதனனை ஆதரித்தார்? முதல் பத்து நாளும் அவனுடைய படைத் தலைவராய்ப் பாண்டவரை எதிர்த்து அல்லவா  அவர் போர் புரிந்தார்!

2 -- துரோணர் 105 பேருக்கும் குரு; அவருக்கு மிகப் பிடித்த சீடன் அருச்சுனன்; ஆனால் அவனை அவர் எதிர்த்தது ஏன்? பீஷ்மர் இறந்த பின்புதுரியோதனனின் அடுத்த தளபதியாய் அவர் செயல்பட்டாரே!
  இரு பெரியவர்களும் கடவுளாகிய கண்ணனுக்கு எதிராய், ஒரு வில்லனுக்குத் துணை போயிருப்பார்களா?

3 -- பீமனிடம் அடி வாங்கித் துரியோதனன் இறந்து வீழ்ந்ததும், தேவர்கள் வென்றவனைச் சட்டை செய்யாமல், தோற்றவனின் உடல்மீது மலர்மாரி பொழிந்தது ஏன்?

 மேல் வினாக்களை எழுப்பி, (அதாவது மாற்றி யோசித்து) விடை கண்டவர் ஒரு தமிழறிஞர்.

 அவர் ச. சோமசுந்தர பாரதியார்.
 
  அவரது முடிவு: துரியோதனன் வில்லன் அல்ல!

  1 - பாண்டவரின் அரசை அவன் சூழ்ச்சியால் கைப்பற்றினானே?

   --- பந்தயம் வைத்துத் தோற்றால் பறிபோகும் தானே!

  2 --- திரவுபதியைத் துகில் உரியச் செய்தவன் கொடியன் அல்லவா?

    --- சூதாட்டத்தில் பணயம் வைக்கப்பட்டு அவள் துரியோதனனுக்கு அடிமை ஆனாள்முன் காலத்தில் அடிமைகள் இடுப்புக்குமேல் துணி அணியக்கூடாது. ஆகையால் மேலாடையைக் களைய மறுத்தது அவள் தவறு. அதனால்தான் துகில் உரிதலை எதிர்த்துப் பாண்டவர்கள் குரல் எழுப்பவில்லை.

    நம் காலத்திலுங்கூட, வேலையாட்கள் முதலாளியைக் கண்டால் முண்டாசை அவிழ்த்துவிடுகிறார்கள்; தோள் துண்டை எடுத்து இடுப்பில் கட்டுகிறார்கள். இதேபோல், பக்தர்கள் கடவுள் சந்நதிக்குச் செல்கையில், துண்டை இடுப்புக்கு மாற்றுகிறார்கள்; திருச்செந்தூர் முதலான சில கோவில்களில் ஆண்கள் சட்டையுடன் சந்நதிக்குள் நுழையமுடியாது. பழைய காலத்து வழக்கம் ஆயிரக் கணக்கான ஆண்டுக்குப் பின்பும் தொடர்கிறது.

   சென்ற நூற்றாண்டுவரை, கேரள மகளிர் ரவிக்கை அணிய  உரிமையற்று வாழ்ந்தனர். துணிவுடன் அணிந்த சிலரின் ரவிக்கைகளைப்  பழமைவாதிகள் கிழித்தார்கள்: அது, “ரவிக்கை கிழிப்புப் போராட்டம்” எனப்படுகிறது.

  3 --- அவளைத் தன் தொடைமீது அமரச்சொன்னது தவறு தானே?

    அடிமைப் பெண்ணிடம் அவ்வாறு உத்தரவு இட எசமானுக்கு உரிமை இருந்தது.

   4 -- பாண்டவர்களைக் கொல்ல அரக்கு மாளிகையைக் கொளுத்த உத்தரவு இட்ட கொலை பாதகன் தானே துரியோதனன்?

     அது குற்றம் தான். மற்றபடி அவன் நல்ல மைந்தன், நல்ல அண்ணன், நல்ல கணவன், நல்ல நண்பன். தான் இல்லாத சமயத்திலும், தன் அந்தப்புரத்துக்குக் கர்ணன் வந்து தன் மனைவியுடன் சொக்கட்டான் ஆடும் உரிமை தந்த பண்பாடு அவனிடம் இருந்தது.

    துரியோதனன் பக்கம் நியாயம் இருந்ததால்தான் பீஷ்மர், துரோணர் முதலியோர் அவனுக்கு ஆதரவு தந்தார்கள்.

   இனிப் பாண்டவரின் சங்கதியைப் பார்ப்போம்:

 1 -- எந்த நாட்டிலும், எக்காலத்திலும், ஓர் அரசனுக்குப் பின்  அவனது  மூத்த மகன்தான் ஆள உரிமையுடையவன் என்பது பொது விதி. அதன்படி, திருதராட்டிரனை அடுத்து, மூத்த புதல்வன் துரியோதனன் மாத்திரமே மன்னன்அவனுடைய 99  சொந்தத் தம்பிகளுக்கே  நாட்டில் பங்கு கிடையாது.  அப்படியிருக்க, அவனது சிறிய தந்தை பாண்டுவின் மக்களாகிய பாண்டவர்களுக்கு ஏது உரிமை? இவர்கள் திருதராட்டிரனின் கருணைக்குப் பாத்திரர் ஆகித் தனி நாடு பெற்றார்கள். தன் தேசத்தின் ஒரு பகுதியைப் பாண்டவர்கள் வசப்படுத்திக்கொண்டமையால், சூதாட்டத்தின் மூலம் அதை மீட்டுக்கொண்டான் துரியோதனன்.

  2 -- சூதாட்டத்தில் தன்னையும் தம்பிமாரையும் மனைவியையும்கூடப் பந்தயம் வைத்தமை தருமனின் பெருந்தவறு.

  3 -- துரோணர், தளபதியாய்ப் போர் புரிந்துகொண்டிருந்தபோது, அவரை வீரத்தால் வெல்ல முடியாது என்பது தெரியவர, அவரது மகனைப் பீமன் கொன்றுவிட்டான் என்று அர்த்தப்படும்படி, இரட்டைப் பொருள் உடைய  ஒரு வசனத்தை அவரிடம் தருமன் சொன்னான். அது கேட்டுபுத்திர சோகத்தில் அவர் ஆழ்ந்திருந்த சமயத்தில், அவரைக் கொன்றனர். குருவைச் சூழ்ச்சியால் கொன்ற பெரும் பாதகர் பாண்டவர்.

  4 -- கதாயுதத்தால் எதிரியை இடுப்புக்குக் கீழே தாக்கக்கூடாது என்பது போர்முறை. அதை மீறி, துரியோதனனைத் தொடையில் அடித்து வீழ்த்தினான் பீமன். (foul) ஆகையால்தான், தேவர்கள் அவனைப் புறக்கணித்துவிட்டு, விதி பிறழாமல் போரிட்ட துரியோதனன்மேல் மலர் தூவினார்கள்.

   மேலே விவரிக்கப்பட்டவை எல்லாம் ச. சோமசுந்தர பாரதியாரின் கருத்துகள். அவற்றை வெளியிட்ட அவர், மறுப்புரைகளை வரவேற்பதாய்த் தெரிவித்தார்எவரும் மறுக்கவில்லை.

           --------------------------------------------------

படம் உதவி; இணையம்.

Sunday 3 November 2013

புகார்ப் புத்தகம்




திருமுடி தம் மனைவியுடன் கும்பகோணம் தொடர்வண்டி நிலையத்தில் கடலூர்க்குப் போகக் காத்திருந்தார். கோடைக்காலப் பகல்! கேட்க வேண்டுமாவெயில் தகித்தது. பாட்டில் தண்ணீர் தீர்ந்துவிடவேநிலையப் பாத்திரத்தில் நிரப்பிக்கொள்ள எண்ணிஅருகில் போய்ப் பார்த்தால்! பாத்திரம் காலி!

பெருத்த ஏமாற்றம் உற்றார். பயணியர் சேவையில் முக்கியம் அல்லவா  குடிநீர் வழங்கல்?   அதுவும் வெயில் காலத்தில்கடமையை ஆற்றாத நிலையத் தலைவர்மீது கோபம் கொண்டார்.

துணைவியின் பக்கத்தில் வந்து அமர்ந்து, " தண்ணீர் இல்லைகடமையைச் செய்பவர்கள் வரவரக் குறைந்துகொண்டே வருகிறார்கள். யாராவது  செல்வாக்கு உள்ளவர் வலுவான இயக்கம் தொடங்கிப் பொதுமக்களைப் போராட்டத்தில் ஈடுபடுத்தி முடுக்கிவிட்டாலொழிய நிலைமை திருந்தாது" என்று பொரிந்து தள்ளினார்.

தற்செயலாய்த் திரும்பிப் பார்க்கையில்கண்ணில் பட்டது சுவரில் தொங்கிய பலகை;  "புகார்ப் புத்தகம் ஸ்டேஷன் மாஸ்டரிடம் இருக்கிறது" என்னும் ரகசியத்தை அது தெரிவித்தது.

புகார் எழுதப் போகிறேன் என்று கிளம்பினவரைத் தடுத்தார் மனைவி. "வேண்டாம்விடுங்கள்;    ஏதாவது காரணம் இருக்கும்" என்றார் அவர்.
" கேட்கிறேன், சரியான காரணமாய் இருந்தால் விடுவேன்; இல்லாவிட்டால் புகார்தான்"

நிலையத் தலைவர் எதையோ எழுதிக்கொண்டிருந்தார்.

            -  குடிநீர் இல்லையே!

            - தெரியும்.

            - வைக்கவேண்டியது உங்கள் கடமைதானே?

            - ஆமாம்.

            - ஏன் வைக்வில்லை?

            -  வைக்கவில்லை என்று எப்படிச் சொல்கிறீர்கள்?

            - காலிப் பாத்திரத்தைப் பார்த்தால் தெரியாதா?

            - வைக்க வைக்கக் காலியாய்த்தான் ஆகிறது.

            - சாப்பிடச் சாப்பிடப் பசித்தால் சாப்பிடாமல் இருப்பீர்களா?

            - ஏன்'யாநீங்கள் பயணியா அல்லது வம்புதும்புக்காரரா?

           -  இரண்டும்தான். புகார்ப் புத்தகம் கொடுங்கள்.

கொஞ்சமும் தாமதிக்காமல் புத்தகத்தைத் தந்தமை வியப்பளித்தது. கெஞ்சுவார் எனத் திருமுடி நம்பியிருந்தார்.

புத்தகத்தில் கடைசிப் புகார் எழுதி இரண்டு ஆண்டுக்குமேல் ஆகியிருந்தது; விழிப்புணர்ச்சியே இல்லாத பயணிகள்!  அவ்வப்போது புகாரைப் பதிந்தால்தானே பொதுத்துறை நிறுவனங்கள் உருப்படும்தாம் ஒரு முன்மாதிரியாக விளங்குவதை எண்ணிப் பெருமிதம் பொங்க, புகாரை எழுதிபக்கத்தில் நின்ற இரு பயணிகளிடம் (இவர்கள் தண்ணீர் இல்லை எனப் புலம்பிக்கொண்டிருந்தவர்கள்) சாட்சிக் கையெழுத்துப் பெற்றுப் புத்தகத்தைத் திருப்பித் தந்தார். வாசித்துப் பார்த்த நிலையத் தலைவர்முகத்தில் எந்த உணர்ச்சியும் காட்டாமல், வைத்துக்கொண்டார்.

வெற்றிப் புன்னகை சிந்தியவாறே வந்து துணைவியிடம் விவரித்த திருமுடி இறுதியில் தெரிவித்தார்:  "கடமை தவறிய குற்றவுணர்வு கொஞ்சங் கூட இல்லை என்பது மட்டுமல்ல,    திமிராயும் பேசினார்;   மாட்டி விட்டுவிட்டேன்;   சரியான பாடம் படிப்பார்."

அருஞ் சாதனை புரிந்த மன நிறைவு.

ஒரு மாதத்துக்குப்பின் அஞ்சலட்டை வந்தது;   விசாரணைக்கு மேலதிகாரி அழைத்திருந்தார். திருமுடிக்குப் பெருமை பிடிபடவில்லை. "புகார் வேலை செய்கிறதுஎன்னாலான சிறு தொண்டு நாட்டுக்கு ஆற்றியிருக்கிறேன்" என்னும் எண்ணத்துடன்,   குறிப்பிட்ட நாள்நேரத்தில் குடந்தை சென்றார். சாட்சிகளும் வந்திருந்தார்கள். மூவரும் உற்சாகத்தோடு உரையாடிக்கொண்டிருந்தனர்.

திருமுடி அழைக்கப்பட்டார்.

  -  நீங்கள்தான் திருமுடியா?

  - ஆமாம்.

  - சொந்த ஊர்?

  - கடலூர்.

   -  என்ன வேலை?

   -  நகராட்சி அலுவலர்.

   -  இங்கே வந்து போக எவ்வளவு செலவாகும்?

   -  ஐம்பது ரூபாய்.

    -  விசாரணை விசாரணை என்று நாலு தடவை இழுத்தடித்தால்வீண் செலவு ஒரு புறம்அலைச்சல் மறு புறம்அடிக்கடி விடுப்பு எடுக்க வேண்டிய கட்டாயம். இதை எல்லாம் யோசித்துப் பார்த்தீர்களா?

     -  இல்லைஆனால் தட்டிக் கேட்க யாராவது வேண்டும்.

     -  தட்டிக் கேட்டாலும் சரி, முட்டிப் பார்த்தாலும் சரிஎன்ன நடந்துவிடும் என்று நினைக்கிறீர்கள்எங்கள் அலுவலர்மேலே நாங்கள் நடவடிக்கை எடுப்போமாகாப்பாற்றத்தான் பார்ப்போம்.

      -  அப்புறம் எதற்குப் புகார்ப் புத்தகம் இருக்கிறது என்ற அறிவிப்பு?

      -  இருக்கிறது என்றால் வாங்கி எழுது என்றா அர்த்தம்?

என்ன பதில் சொல்வது எனத் திருமுடிக்குத் தெரியவில்லைமௌனம் காத்தார்.

அதிகாரி தொடர்ந்தார்: "பேசாமல் வாபஸ் கடிதம் கொடுத்துவிட்டுப் போய் உங்கள் வேலையைப் பாருங்கள்."

விட்டால் போதும் என்ற நிலைக்கு வந்துவிட்ட திருமுடி அவ்வாறே செய்த பின்புசாட்சிகளின் கண்ணில் படாமல் நழுவினார்.

புகார்கள் இல்லாமல் புத்தகம் ஏன் காலியாய் இருந்தது என்பது இப்போது புரிந்தது. எல்லாரும் புத்திசாலிகள்தாம் மட்டும் பைத்தியக்காரர் என்று நொந்தார்.

                             +++++++++++++++++++