1 -- வான்கோழி --- இது அமெரிக்கப் பறவை; 16-ஆம் நூற்றாண்டில் அங்கே வளர்ப்புப் பறவை ஆயிற்று. அங்கிருந்து ஐரோப்பாவுக்குக்
கொண்டு செல்லப்பட்டு, இந்தியாவில் வெள்ளையர் ஆட்சி
நிலைத்த பின்பு, இங்கு அறிமுகம் ஆனது. இது 17 அல்லது 18-ஆம் நூற்றாண்டில் நிகழ்ந்திருக்கலாம்.
எனவே, "கான மயிலாடக் கண்டிருந்த வான்கோழி" என்று பாடிய பிற்கால ஒளவையார் அப்போது வாழ்ந்தார் என முடிவு
கட்டலாம்.
(மிளகாய், உருளைக் கிழங்கு முதலியவற்றையும் அமெரிக்காவிலிருந்து
நம் நாட்டுக்கு ஐரோப்பியர்தான் கொண்டு வந்தனர்)
2 -- பித்தலாட்டம் -- ஏமாற்று வேலை எனப் பொருள்படும்.
பித்தலாட்டம், இரு வடமொழிச்சொற்களின் கூட்டு: பித்தளா + ஆடகம்.
பித்தளாவைத் தமிழில் பித்தளை என்கிறோம். இது செம்பும் துத்தநாகமும் கலந்த உலோகம்.
ஆடகம் என்பது தங்கம்; இரண்டும் ஒரே நிறமாக இருப்பதால், இதுவா அதுவா என ஐயப்பட இடம் உண்டு. இதைப் பயன்படுத்தி, மோசடிப் பேர்வழிகள், பித்தளையை ஆடகம் என்று சொல்லி ஏமாற்றினால், அது பித்தலாட்டம்.
3 -- மடையன் - இச்சொல்லுக்கு உரிய பொருள்: சமையற்காரன். கோவிலில் பிரசாதம்
சமைக்கும் இடத்தை மடைப்பள்ளி என்கிறோம் அல்லவா?
சொல்லின் பழைய வடிவம் மடவன். மடமை என்னும் வேரிலிருந்து
கிளைத்தது; வேறு கிளை: மடத்தி, மடந்தை, மடத்தனம். மடமை என்றால் அறியாமை என்று பலரும்
அறிவர்.
குறுந்தொகை
பா. 66
மடவ மன்ற தடவுநிலைக் கொன்றை
(கொன்றை மரங்கள் மடமை உடையன)
பா. 251:
மடவ வாழி மஞ்ஞை
(மயில் கூட்டங்கள் அறியாமை வாய்ந்தவை)
இதே அர்த்தம் கொண்ட முட்டாள் என்ற வார்த்தை முற்றாள்
என்பதன் மரு.
முற்று + ஆள் = முழுதும் ஆள்,
அதாவது முழுவதும் உடம்பு. மூளை இல்லை என்பது குறிப்பாகச்
சொல்லப்படுகிறது.
4 -- "மூர்த்தி சிறிதானாலும் கீர்த்தி பெரிது"
என்ற பழமொழியில் மூர்த்தி என்பதற்குச் சிலை என்று பொருள். (குறிப்பிட்ட கடவுளின்) சிலை
சிறியது தான், எனினும் அதன் புகழ் பெரியது.
நாளடைவில், மூர்த்தியின் அர்த்தம் விரிவடைந்து, சாமியையே சுட்டுவதாய் மாறிற்று.
ராமமூர்த்தி - ராமன் ஆகிய கடவுள்.
++++++++++++++++++++++++++++++++++