Saturday 26 March 2016

திருக்குறளின் உள்ளடக்கம்




தமிழ் இலக்கியங்களில் பாக்கள் முழு எண்ணிக்கையில் இருப்பதைக் கவனிக்கிறோம்:
பதிகம் --- 10
இனியவை, இன்னா, கார்,  களவழி -- 40
ஐந்திணை -- 50.
 பதிற்றுப் பத்து, சதகம் -- 100
திணைமாலை --150
குறுந்தொகை, அகம், புறம், நற்றிணை, பழமொழி, -- 400
திருமந்திரம் -- 3000
திவியப் பிரபந்தம் -- 4000
இவையெல்லாவற்றுக்கும் முரணாகத் திருக்குறள் அதிகாரம் மட்டும் 133 என அரைகுறை
எண்ணாகஇருப்பதேன்? ஆசிரியர் இயற்றியவை 100, இடைச்செருகல் 33 என்று இருக்குமோ?
..சிதம்பரனார், முதல் மூன்று அதிகாரங்கள் பிற்காலத்தில் சேர்க்கப்பட்டவை எனக் கருத்து 
தெரிவித்தார்; அவரது கூற்றுப்படி, அதிகாரங்கள்  130  (முழு எண்).
நான் ஊகிக்கிறேன் 100 தான்  அசல், மற்றவை  இடைச்செருகல் என.  எப்படி இருப்பினும், பயனில 
சொல்லாமை, ஊழ், பெண்வழிச் சேறல் ஆகிய  மூன்றும் நிச்சயமாய்ப் பிற்சேர்க்கையே என்று 
எனக்குப் படுகிறது.

1 -- பயனற்றவை பேசுதல் கடுங் குற்றமா? கேட்பார்க்கு என்ன கேடு உண்டாகிவிடும்
பெரும்பாலார் அப்படிப் பேசுவதில்லை; சிலர்க்கு மாத்திரம் அது பழக்கம். நம்பிக்கைத்  துரோகம்
வாக்குத் தவறுதல் முதலிய, மற்றவர்க்கு ஊறு விளைவிக்கும், குற்றங்களைக்  கண்டுகொள்ளாமல் 
விட்ட  திருவள்ளுவர்,  ஒரு சாதாரண  பழக்கத்தைக்  கடிந்து  பத்துப் பா  இயற்றியிருப்பாரா
பயனில சொல்லுவோர் மக்களே அல்ல, பதர்கள்  என்று கடுமையாக இழித்துரைப்பாரா?

2 -- ஊழ் அதிகாரம், நூல் முழுதும் வற்புறுத்தும் ஆக்கக் கருத்துகளுக்கு அடியோடு முரண்பட்டு 
அவற்றுக்கு வேட்டு வைக்கிறது.

     ஆகூழால் தோன்றும் அசைவின்மை கைப்பொருள்
      போகூழால் தோன்றும் மடி.

 கருத்து - முயற்சியும் சோம்பலும் ஊழால் உண்டாகும் என அந்த அதிகாரம் கூறுகிறது .
ஆனால்
திருவள்ளுவர் மற்ற அதிகாரங்களில் என்ன  சொல்லியுள்ளார்?

603 -   மடிமடிக் கொண்டொழுகும் பேதை

சோம்பேறியாய்  ஒழுகுபவன் அறிவில்லாதவன்.

605 -  நெடுநீர் மறவி மடிதுயில் நான்கும்
     கெடுநீரார் காமக் கலன்.

கெட்டுப் போகிறவர்கள் விரும்பி செய்யும்  நான்கு குற்றங்களுள் ஒன்று  சோம்பல் .

607 --   ..........................  மடிபுரிந்து
      மாண்ட உஞற்றி லவர்.

புரிந்து = விரும்பி. மாண்ட உஞற்றிலவர் = சோம்பலை  விரும்புவதால் முயற்சி செய்யாதவர்.

619 --   தெய்வத்தான் ஆகாது எனினும் முயற்சிதன்
    மெய்வருத்தக் கூலி தரும்.

ஊழ் காரணமாய் முழுதும் முடியாமற் போனாலும் பாடுபட்ட அளவு பலன் கிடைக்கும்; ஆகையால் 
முயல்வது மேலானது .

620 --    ஊழையும் உப்பக்கம் காண்பர் உலைவின்றித்
      தாழாது உஞற்று பவர்.

விடாமுயற்சி ஊழையும் முறியடிக்கும்.

இவ்வாறு பெரும்பாலான பாக்களால் ஆசிரியர், மக்களைச் செயலுக்குத் தூண்டுகிறார்; எனவே 
ஊழ் அதிகாரம் அவருக்கு உடன்பாடல்ல.

3 -- பெண்வழிச்சேறல், ஒருவன் தன் மனைவிக்கு அஞ்சி நடப்பதை வன்மையாய்ச் சாடுகிறது.

மனைவிக்கு, 'வாழ்க்கைத் துணை' என்னும் விருது தந்து, "பெண்ணின் பெருந்தக்கது இல்" 
என்று அவளை மேன்மைப்படுத்தி,

  பெண்ணின் பெருந்தக்க யாவுள கற்பென்னும்
   திண்மை உண்டாகப் பெறின்

என்று வினவிப் பெண்ணுக்கு உயர்வு தந்த ஆசிரியர், அத்தகைய கற்புடைய இல்லாளின் சொற்கேட்டு 
நடக்கும் கணவனை  இகழமாட்டார்.

பெண்ணை மட்டந்தட்டும் அந்த அதிகாரம், 'உயர்ந்தவனாகிய கணவன், தாழ்ந்தவளாகிய 
மனையாளைஅடக்கி ஆள வேண்டுமே தவிர, அவள் பேச்சைக் கேட்டு ஒழுகுவது ஆண்மைக்கு  
இழுக்குஎன்ற கருத்து கொண்ட ஆணாதிக்கவாதி ஒருவரின் சரக்குதான்.
    வேறு இடைச்செருகல்களும் இருக்கலாம் என்று கருதுகிறேன்.

+++++++++++++++++++++++++++
(படம் உதவி - இணையம்)

Sunday 20 March 2016

சிட்டுக்குருவி

நூல்களிலிருந்து -- 5

சுப்ரமணிய பாரதியாரைப் பொறுப்பாசிரியராய்க் கொண்டு, 'இந்தியா'   என்ற வாரப் பத்திரிகை, 1906 இல் வெளிவரத் தொடங்கியது; அதில், அவர்   ஆங்கிலேயரின் ஆதிக்கத்தை எதிர்த்து எழுதியதோடு, தத்துவம் சமூகம் கலை முதலிய பல பொருள் குறித்துக்  கட்டுரைகளும் வரைந்தார்அவை,   'பாரதியார் கட்டுரைகள்'  என்னும் தலைப்புடன், 496 பக்கமுடைய நூலாய்   1981-இல் பிரசுரமாயிற்று. அக்கட்டுரைகளுள் ஒன்றின் முதற்பாதியை   மட்டும்   அன்பர்களுடன் பகிர்ந்துகொள்கிறேன்.

சிட்டுக்குருவி




   "சிறிய தானியம் போன்ற மூக்கு; சின்னக் கண்கள்; சின்னத் தலை; வெள்ளைக் கழுத்து; அழகிய மங்கல்-வெண்மை நிறமுடைய பட்டுப்   போர்த்த வயிறு; கருமையும் வெண்மையும் கலந்த சாம்பல் நிறத்தாலாகிய பட்டுப் போர்த்த முதுகு; சிறிய தோகை;   துளித் துளிக் கால்கள்.

   இத்தனையும் சேர்த்து ஒரு பச்சைக் குழந்தையின் கைப்பிடியிலே   பிடித்துவிடலாம். இவ்விதமான உடலைச் சுமந்துகொண்டு என்  வீட்டிலே இரண்டு உயிர்கள் வாழ்கின்றன. அவற்றுள்  ஒன்று ஆண், மற்றது பெண். இவை தம்முள்ளே பேசிக்கொள்கின்றன. குடும்பத்துக்கு  வேண்டிய உணவு தேடிக்கொள்கின்றன. கூடு கட்டிக்கொண்டு, கொஞ்சிக்  குலாவி, மிக இன்பத்துடன் வாழ்ந்து முட்டையிட்டுக் குஞ்சுகளைப் பசி இல்லாமல் காப்பாற்றுகின்றன.

    சிட்டுக்குருவி பறந்து செல்வதைப் பார்த்து எனக்கு அடிக்கடி பொறாமை   உண்டாகும். ஆகா! உடலை எவ்வளவு லாகவத்துடன் சுமந்து செல்கின்றது!   இந்தக் குருவிக்கு எப்போதேனும் தலை நோவு வருவதுண்டோ? ஏதுஎனக்குத் தோன்றவில்லை. ஒரு முறையேனும் தலை நோவு அனுபவித்த முகத்திலே இத்தனை தெளிவு  இருக்க  நியாயமில்லை;  பயமும்  மானமும் மனிதனுக்கு   உள்ளது போலவேகுருவிக்கு உண்டு;  இருந்தபோதிலும், க்ஷணந்தோறும், மனிதருடைய நெஞ்சைச் செல்லரிப்பது போலே அரிக்குங் கவலைத் தொகுதியும், அதனால் ஏற்படும் நோய்த்திரளும் குருவிக்கு இருப்பதாகத் தெரியவில்லை.

   தெய்வமே, எனக்கு இரண்டு சிறகுகள் கொடுக்க மாட்டாயாபாழ்பட்ட   மனிதக்கூட்டத்தையும் அதன் கட்டுகளையும் நோய்களையும் துன்பங்களையும் பொய்களையும் உதறி எறிந்துவிட்டு நான் இச்சைப்படி வானத்திலே பறந்து செல்ல மாட்டேனா?

   குருவிக்குப் பேசத் தெரியும், பொய் சொல்லத் தெரியாது. குருவியில் ஆண் பெண் உண்டு, தீராத கொடுமைகள் இல்லை.

 இந்தக் குருவி என்ன சொல்லுகிறது? "விடு, விடு, விடு" என்று கத்துகிறது. இஃது நான் விரும்பிய இன்பத்திற்கு, வழி இன்னதென்று, தெய்வம் குருவித்தமிழிலே எனக்குக் கற்றுக்கொடுப்பது போலிருக்கிறது. விடு, விடு, விடு. உள்ளக்கட்டை அவிழ்த்து விடு, வீண் யோசனையை விடு, துன்பத்தை விடு."

 (இக்கருத்தைக் கவிஞர் பாட்டிலும் சொல்லியுள்ளார்:
      விட்டு விடுதலை ஆகி நிற்பாய் - இந்தச்
      சிட்டுக்  குருவியைப் போலே.)

               .............................................................
          (படம் உதவி இணையம்)