Tuesday 20 June 2017

விளையும் பயிர் ...




(பிரஞ்சு எழுத்தாளர் ழான் போல் சார்த்ரு (Jean Paul Sartre - 1905/1980) இலக்கிய நோபல் பரிசு பெற்றவர்; அவருடைய நூல்கள் பல்வேறு மொழிகளில் பெயர்க்கப்பட்டுள்ளன. அவற்றுள் ஒன்று 1964-இல் வெளிவந்த லே மோ (Les Mots = சொற்கள்). நான்காம் வயதிலிருந்து பதினோராம் வயது வரைக்குமான தமது வாழ்க்கை வரலாற்றை அதில் அவர் விவரித்துள்ளார்.   

 சார்த்ரின் தந்தை ழான் பப்தீஸ்த், தம் இளமையில் காலமாகிவிடவே, தாயார் ஆன்னு மரீ (Anne Marie), குழந்தையுடன் தம் பெற்றோரின் வீட்டில் போய் வசிக்கலானார். அவருடைய தகப்பனார் ஷார்ல், பேராசிரியராய்ப் பணியாற்றி ஓய்வு பெற்றவர்.

 ஏழாம் வயதிலேயே எழுத்தாளர் ஆவதற்கான முயற்சி மேற்கொண்ட சார்த்ரு, தாம் வாசித்த சிறுவர் இதழ்களில் தம்மைக் கவர்ந்தவற்றை ஒரு சுவடியில் குறிக்கும் வழக்கத்தைக் கைக்கொண்டார். அவற்றைக் காப்பியடித்து எழுதவும் செய்தார்.

 அந்நூலிலிருந்து சில பகுதிகளை, பொருத்தமான தலைப்பு தந்து, மொழிபெயர்த்திருக்கிறேன்:)

 "என் தாயார் அளவின்றி ஊக்கமூட்டினார். இளம் படைப்பாளியைக் காட்டுவதற்காக அவர், விருந்தினரை என் அறைக்கு அழைத்து வருவார்; அவர்களின் வருகையைக் கவனிக்காத அளவுக்கு வேலையில் ஆழ்ந்திருப்பதுபோல் காட்டிக்கொள்வேன். 'மிகச் சிறு வயது, மிக அழகிய காட்சி' என அவர்கள் மென்குரலில் சொல்லிக்கொண்டு கால் விரல் நுனிகளில் வெளியேறுவார்கள். 'ஏதோ எழுதட்டும், சாதுவாக இருக்கிறானே, சத்தம் போடுவதில்லையே, அது போதும்' என்று அம்மா சொல்லுவார்.

  நான் எழுதத் தொடங்கியிருப்பதை ஷார்லிடம் என் தாயார் தெரிவித்தபோது அவர்க்குப் பெருமகிழ்ச்சி; எங்கள் குடும்பம் பற்றிய சுவையான தகவல்களை எழுதுவேன் என எதிர்பார்த்தார் போலும். என் சுவடியை எடுத்துப் புரட்டினார்; சில இதழ்களின் உளறல்களையே என் எழுதுகோல் மறுபிரசவித்திருந்தமை கண்டு உதட்டைப் பிதுக்கிவிட்டு வெளியேறினார். பின்பு என் எழுத்தில் அக்கறையே காட்டவில்லை.

 என் தாயார், 'வாழைப்பூ வணிகர்' என்னும் என் புதினத்தை வாசிக்கச் செய்துவிட வேண்டும் எனப் பல தடவை முயன்று பார்த்தார்.

 இவர் காத்திருப்பார், அவர் தம் நாற்காலியில் அமர்வதற்காக. அவர், மெளனமாய், முழங்கால்களின்மீது கைகளை வைத்துக்கொண்டு ஓய்வெடுக்கையில், அம்மா என் கையெழுத்துப் பிரதியை எடுத்துப் புரட்டிப் பார்த்துத் திடீரென வாய்விட்டுச் சிரிப்பார்; உடனே என் பாட்டனாரிடம் நீட்டி, "வாசித்துப் பாருங்கள்,அப்பா! எவ்வளவு வேடிக்கையாக இருக்கிறது!" என்பார்; அவரோ, சுவடியைக் கையால் ஒதுக்கித் தள்ளுவார்; அல்லது ஒரு கண்ணோட்டம் விட்டு, எழுத்துப் பிழைகளை எடுத்துச் சொல்லி ஏளனஞ் செய்வார்.

 நாளடைவில் என் தாய்க்கு அச்சம் ஏற்பட்டுவிட்டது; விமர்சனத்தால் எனக்கு மன வருத்தம் உண்டாகக்கூடாது என்பதற்காக என் எழுத்துகளை வாசிப்பதை நிறுத்தினார், அவை பற்றி என்னிடம் பேசுவதைத் தவிர்க்கும் நோக்கத்தில்.

  இருப்பினும் தொடர்ந்து எழுதினேன்: விடுமுறைக் காலங்களிலும், நான் அதிர்ஷ்டவசமாய் நோய்வாய்ப்பட்டால், என் கட்டிலிலும். நான்  நினைவு கூர்கிறேன், உடல் தேறி வந்தபொழுது, பின்னல்வேலை செய்கிறவர்களைப் போன்று, என் சுவடியை நான் எடுப்பதும் வைப்பதுமாய் இருந்ததை. என் புதினங்களே எனக்கு எல்லாம்; என் மகிழ்ச்சிக்காக நான் எழுதினேன்.

 ஒரு காலையில் நாளிதழைத் திறந்தபோது, அச்சத்தில் உறைந்துபோனேன். பற்பல செய்திகளுக்குள் ஒன்று என்னைத் திடுக்கிட வைத்தது. எனக்கு இன்னமும் நினைவிருக்கிறது தலைப்பு: 'மரங்களில் காற்று'.

  ஒரு மாலை வேளையில், நோயாளிப் பெண்ணொருத்தி தன் கோடை வாசஸ்தலத்தின் மாடியில், தனியாய்க் கட்டிலில் புரண்டுகொண்டிருந்தாள். திறந்திருந்த சன்னல் வழியாக ஒரு மரம் தன் கிளைகளை அறைக்குள் நுழைத்தது; கீழ்த் தளத்தில் சிலர் கூடி, தோட்டத்தில் இரவு கவிவதைப் பார்த்தபடி உரையாடிக்கொண்டிருந்தனர்; அவர்களுள் ஒருவர் திடீரென மரத்தைச் சுட்டிக்காட்டி, 'அட, காற்று இருக்கிறதே!' என்றார்; ஒரே வியப்பு! வெளியில் வந்து பார்த்தால், காற்று லேசாய்க்கூட வீசவில்லை; எனினும் இலைகள் அசைந்தன.

 அப்போது ஓர் அலறல்! நோயாளியின் கணவர் அவசர அவசரமாய் மாடி யேறினார். கட்டிலில் அமர்ந்திருந்த நோயாளி, கை நீட்டி மரத்தைக் காட்டியபடி இறந்து சாய்ந்தார். மரம் தன் பழைய நிலைக்குத் திரும்பிற்று.
அவள் என்ன பார்த்தாள்?

 ஒரு மனப்பிணியாளர் மருத்துவமனையிலிருந்து தப்பிப் போய்விட்டார்; அவர், மரத்தில் மறைந்துகொண்டு, கோணங்கி காட்டியிருப்பார்; அவராய்த்தான் இருக்கவேண்டும்; ஏனெனில் வேறெந்தக் காரணமும் புலப்படவில்லை. ஆனால்? அவர் ஏறியதையோ இறங்கியதையோ எப்படி யாரும் பார்க்காமலிருக்க முடியும்? நாய்கள் ஏன் குரைக்கவில்லை? ஆறு மணி நேரத்தில் எப்படி அவரைக் கைது செய்தார்கள், நூறு கிலோமீட்டருக்கு அப்பால்? விடை தெரியா வினாக்கள்! நிருபர் தம் கருத்தைக்கூறி செய்தியை முடித்திருந்தார்: 'கிராம மக்களின் கூற்றுப்படி, மரக்கிளையை அசைத்தது சாவுக்கடவுள் தான்'.

 இது போன்ற பயங்கரக் கதைகள் அப்போது பல நூல்களில் கூறப்பட்டிருந்தமையால் எனக்குப் புத்தகங்களைப் பற்றி அச்சம் ஏற்பட்டது; இருந்தாலும்  காப்பியடித்தேன்.

..............................................................................................................................................

 பூர்ஷ்வா குழந்தைகள் தத்தம் எதிர்காலக் கனவு பற்றிச்  சொல்லுகிற பருவத்தை நான் அடைந்தேன்.

  என் மாமனின் மக்கள், தங்கள் தந்தையைப் போன்றே பொறியாளர் ஆவார்கள் என்று நீண்ட காலத்துக்கு முன்பே எங்களுக்குத் தெரிவித்திருந்தனர்.

 என் நெற்றியில் நான் சுமந்திருந்த அறிகுறியைக் கண்டுபிடித்த முதல் ஆளாக இருக்க விரும்பிய எங்கள் குடும்ப நண்பி, திருமதி பிக்கார், " இந்தப் பையன் எழுதுவான்" எனப் பலத்த நம்பிக்கையுடன் கூறினார்; எரிச்சலுற்ற பாட்டி லூய்சு, சிறிய மற்றும் உணர்ச்சியற்ற சிரிப்பை உதிர்த்தார்; திரும்பி அவரை நோக்கிய ப்ளான்ஷ் பிக்கார் மறுபடியும் உறுதியாகச் சொன்னார்:

 "இவன் எழுதுவான்,  எழுதப் பிறந்தவன்". ஷார்ல் என்னை ஊக்குவிக்கமாட்டார் என்பது என் தாயாருக்குத் தெரியும்; சங்கடங்கள் வரக்கூடும் என அவர் அஞ்சினார்: "நீங்கள் நம்புகிறீர்களா, ப்ளான்ஷ்? நம்புகிறீர்களா?" என்று கேட்டார்; ஆனால் இரவு நான் கட்டிலில் படுத்தபோது அவர் என் தோள்களை வலுவாய் அழுத்திப் புன்னகையுடன் கூறினார்: 'என் சின்னக்கண்ணு எழுதும்!'.

 என் பாட்டனாரிடம் தெரிவித்தனர், பக்குவமாய், அவரது சீறலுக்கு அஞ்சி; அவர் தலையை ஆட்டியதோடு சரி. சில நாள்களுக்குப் பின்பு, அவர், தம் நண்பர் சிமோன்னோவிடம் பின்வருமாறு சொன்னது என் காதில் விழுந்தது: "ஒரு திறமை வெளிப்படுவதை, யாரும் தம் இறுதிக்காலத்தில் மனக் கிளர்ச்சி இல்லாமல் பார்க்க முடியாது". ஆயினும் என் கிறுக்கல்களைக் கண்டுகொள்ளாமல் இருப்பதைத் தொடர்ந்தார்.

  ஒரு நாள் மாலை, என்னைத் தம் தொடைகளில் அமரவைத்து என்னிடம் சீரியசாகப் பேசத் தொடங்கினார். நான் எழுதுவேன், அது தீர்மானிக்கப்பட்ட விஷயம். அவர் என் ஆசைக்கு மாறாய்ப் பேசுவார் என நான் அஞ்சவில்லை.

 அவர் சொன்னார்: "எதார்த்தத்தை நேருக்கு நேராகவும் தெளிவாகவும் பார்க்கவேண்டும். இலக்கியம் உணவளிக்காது; புகழ் வாய்ந்த எழுத்தாளர் பலர் பட்டினியால் செத்தார்கள் என்பது தெரியுமா? வேறு சிலர் சாப்பாட்டுக்காகத் தம்மை விற்றுக்கொண்டானர் என்பது? தன் சுதந்தரத்தைக் காப்பாற்றிக்கொள்ள வேண்டுமானால், வேறொரு தொழிலையுந் தேர்வது அவசியம். பேராசிரியர்க்கு நிறைய ஓய்வுண்டு; பல்கலைக்கழகப் பணிகள் இலக்கியவாதிகளின் வேலைகளுக்கு ஒப்பானவைதான். இடம் விட்டு இடம் மாறிக்கொண்டே இருக்கலாம்; பெரும்பெரும் நூலாசிரியர்களின் தொடர்புடன் வாழலாம்; அவர்களுடைய படைப்புகளை நம் மாணவர்களுக்குப் பாடஞ்சொல்கிற அதே சமயம் அவற்றிலிருந்து நாம் அகவெழுச்சி (inspiration)  கொள்ளலாம்; உன் தனிமையிலிருந்து திசை திரும்பக் கவிதை புனையலாம்; லத்தீன் கவிஞர்களை மொழிபெயர்க்கலாம்; உள்ளூர்ச் சஞ்சிகைகளுக்கு சிறசிறு இலக்கியக் கட்டுரைகள் அனுப்பலாம்; கல்வி போதனை குறித்த இதழில் கிரேக்க மொழியைக் கற்பிப்பதற்கான வழி பற்றி உயர்தரமான கட்டுரை எழுதலாம். இள வயதினரின் மனவியல் (psychology) பற்றியும் எழுதலாம்".

என்னை அவர் இலக்கியத்திலிருந்து வெளியேற்றச் செய்த முயற்சி என்னை அதில் தள்ளிற்று.

                    +++++++++++++++++++++++++++++
 (படம் உதவி - இணையம்)


Tuesday 6 June 2017

மாறும் இலக்கணம்





இலக்கியங்களுக்குப் பின்பே இலக்கணந் தோன்றும் என்பதைப் பலரும் அறிவர். இலக்கண ஆசிரியர்கற்றறிந்தோரின் மொழிவழக்குகளை ஆராய்ந்துஅவற்றை வகைப்படுத்தித் தேவையானவற்றுக்குப் பெயர் சூட்டி, விதிகளை உருவாக்கி நூலியற்றுவார். அந்த விதிகளைப் பின்பற்றிப் படைப்புகள் பிறக்கும்.

  ஒரு மொழியின்முதல் இலக்கண ஆசிரியரின் பணி மிகக் கடினம், அவருக்கு முன்னோடி இல்லாமையால்.

  நமக்குக் கிடைத்துள்ள தொல்காப்பியம் இலக்கண நூல்களுள் முந்தியது; இது சங்க இலக்கியங்களுக்கும் முற்பட்டது என்பது ஆய்வாளர் கருத்து. அதற்குப் பின்னர்த் தோன்றிய முக்கிய நூல் வீரசோழியம் (11 ஆம் நூ.) நிலைத்து நிற்கவில்லை; அடுத்து வந்த நன்னூல், பவணந்தியால் (13 ஆம் நூ.) இயற்றப்பட்டுத் தனக்குப் பிந்தைய

 1 --நேமிநாதம் (12)
 2-- இலக்கண விளக்கம் (17)
 3 -- தொன்னூல் விளக்கம் (17)
 4 -- இலக்கணக் கொத்து (17)
 5-- பிரயோக விவேகம் (17)
 6 -- முத்துவீரியம் (19)

  ஆகிய எல்லா நூல்களையும் புறந்தள்ளிக் காலத்தையும் வென்று இன்றுவரை ஆதிக்கஞ் செலுத்துகிறது.


தமிழறிஞர் தொன்றுதொட்டுப் போற்றிவருவன தொல்காப்பியமும் நன்னூலுமே. இவ்விரண்டுக்குமிடையே பன்னூறாண்டு கழிந்த நிலையில்வேறுபாடுகள் இருப்பது இயல்புதானே?

  காட்டுகள்:

  1 -- குற்றியலிகரம், குற்றியலுகரம், ஆய்தம் எனச் சார்பெழுத்து மூன்று என்று தொல்காப்பியர் கூறியிருக்கப் பவணந்தி ஏழு கூட்டிப் பத்தென்றார்.

 2 -- அவர் சொன்ன சாரியைகள் அக்கு, இக்கு, வற்று; அவற்றை இவர் அ, கு, அற்று என மாற்றியதோடு இற்று என்ற ஒன்றனைப் புதியதாய்ச் சேர்த்தார்.

 3 -- தொல்காப்பியத்தில் இல்லாத கிறு, கின்றுஆநின்று என்ற மூன்று நிகழ்கால இடைநிலைகளை நன்னூல் சொல்லுகிறது.

  பவணந்தியார் காலத்துத் தமிழுக்கு இலக்கணமாய்த் திகழ்வது நன்னூல்அதற்குப் பின்பு எழுநூறு ஆண்டுகள் ஓடிவிட்டனவே! அதன் விதிகள் நூற்றுக்குநூறு இப்போது எவ்வாறு பொருந்தும்?

  1 -- தன்மைப் பன்மை வினைமுற்று விகுதிகள் அம், ஆம், எம், ஏம், ஓம், கும், டும், தும், றும் என நன்னூல் ஒன்பதைப் பட்டியலிடுகிறது; அவற்றுள் ஓம் ஒன்றே உயிர்பிழைத்துள்ளது; காட்டு: வந்தோம், செய்வோம்.

  2 --  ஆநின்று இடைநிலை மாண்டுவிட்டது.

  3 -- , , உ என முச்சுட்டைச் சொன்னார் பவணந்தி; இப்போது உ பயன்படுவதில்லை.

 4 -- வினையெச்ச விகுதிகளின் வாய்பாடு 12 கூறப்பட்டுள்ளன; அவற்றுள் செய்து செய என்ற இரண்டு மட்டுமே இப்போது உண்டு; செய்தால்செய்திருந்தால், செய்துவிட்டால் முதலிய புது வினையெச்ச வடிவங்கள் தோன்றியிருக்கின்றன.

 5 --  யார் என்பது உயர்திணைக்குரியது; அதை மாணிக்கவாசகர் ஆர் என  மாற்றியதுடன், 'என் உள்ளம் ஆர்?' என அஃறிணைக்குப் பயன்படுத்தினார்.

  6 --  ஆறாம் வேற்றுமைப் பொருள், உடைமை; ஆதலால் எனது வீடு, அவளது குடை என்றெழுதுவது போல் எனது மனைவி என்று எழுதுதல் கூடாது; மனைவி உடைமையல்லவே! ஆனால் பாரதிதாசன், "வலியோர் சிலர்" எனத் தொடங்கும் பாட்டில், உலகாள உனது தாய்..." என்றார்; வேறு பல அறிஞரும் இவ்வாறு எழுதுவதால், ஆறாம் வேற்றுமைக்கு முறைப்பொருளும் உண்டு என்று கொள்ளவேண்டும்.

 7 --பொதுப் பெயர்க்குப் பின் வல்லினம் மிகக்கூடாது என்பது விதி; தாய் கை, தங்கை தலை, தம்பி கால் என்பன சரிஆனால், குமரகுருபரர், தமது நீதிநெறி விளக்கத்தில், ( பா 32 ), தாய்க் கொலை என்றெழுதியிருக்கிறார்; தாய்ப் பறவை, தாய்ப் பசு என்னும் வழக்குகளும் உண்டு.

 8 -- "இப்படிச் செய், எப்படிக்கேட்டாய்?" என விதி கூறுகிறது நன்னூல்; ஆறுமுக நாவலர், (19 ஆம் நூ.) இலக்கணச் சுருக்கம் என்ற நூலில், " சுட்டு வினாக்களையடுத்த ' படி' முன் உறழ்ச்சி" என்று புது விதி வகுத்துள்ளார்; அதனால், இப்படி செய், இப்படிச் செய்; எப்படி கேட்டாய்? எப்படிக் கேட்டாய்? என இருவிதமாகவும் எழுதலாம்.

 9 -- மதுரைக் கூலவாணிகன் சாத்தனார் என்பது ஒரு பழம்புலவரின் பெயர்; அது போல் 'மதுரைக் காமராஜர் பல்கலைக் கழகம்' என்றுதான் எழுதவேண்டும்; தமிழண்ணல், மதுரை காமராஜர் என க் போடாமல் எழுதச் சொல்லுகிறார். (நூல்: உங்கள் தமிழைத் தெரிந்துகொள்ளுங்கள்).
 மாற்றங்கள் ஏற்படும் என்பதனைப் பவணந்தி எண்ணிப் பார்த்து,

    பழையன கழிதலும் புதியன புகுதலும்
    வழுவல ...

 என்றார்.

  நம் காலத் தமிழ்க்கான இலக்கண நூல், 'இக்காலத் தமிழ் இலக்கணம்' என்னுந் தலைப்புடன் 2002 இல் பிரசுரமாயிற்றுஅதனை இயற்றியவர் இன்றைய இலக்கண ஆளுமைகளுள் குறிப்பிடத்தக்கவராகிய முனைவர் த. பொற்கோ. அதன் முன்னுரையில், ( பக். 2) "இன்றைய இலக்கியத் தமிழுக்கு நன்னூலும் தொல்காப்பியமும் போதுமானவையாக அமையவில்லை; ஆகவே இன்றைய தமிழுக்கு ஒரு புதிய இலக்கணம் தேவை" என்று அவர் எழுதியிருப்பது ஏற்கத்தக்கது.

  பழைய இலக்கண நூல்களிலிருந்து விலகிப் புது முறையில் எழுதியுள்ள அதன் 264 ஆம் பக்கத்தில் புது விதி வகுத்துள்ளார். 'இக்காலத் தமிழில் அல்ல என்பது ஐம்பால் மூவிடப் பொது வினையாக மாறிவிட்டது என்று சொல்லவேண்டும்" என்று தெரிவித்துஅவனல்ல, அவளல்ல, அவையல்ல என்று காட்டுகள் தருகிறார். ஆகவேநானல்லேன், நீயல்லை, நாமல்லோம் என்றெல்லாம் பழைய விதிப்படி எழுதத் தேவையில்லை.

  123 ஆம் பக்கத்தில், " சந்தி இலக்கணத்திலும் மாற்றம் ஏற்பட்டிருக்கிறது; இதை உணர்ந்து இன்றைய மொழிநிலைக்கு ஏற்ப ஒரு சந்தி இலக்கணத்தை நாம் இங்கே விளக்கவேண்டியுள்ளது" என்று கூறிப் புதிய விதிகளை விவரித்துள்ளார்:

  எடுத்துக்காட்டாக,

1 -- அஃறிணைக்கே உரியவாயிருந்த பல, சில என்பவை இக்காலத்தில் உயர்திணையிலும் பயன்படுகின்றன எனச் சொல்லிசில மாணவர்கள் இங்கு வந்தார்கள் என்று காட்டு தந்துள்ளார். (பக்.343).

 2 --பத்துபேர் (130) , சாக்குபோக்கு (131) , பத்து பத்தாக, (156) , பாட்டுதான் (156 ) என்றெல்லாம் வன்றொடர்க் குற்றியலுகரங்களுக்கு முன் ஒற்று மிகாமல் எழுதலாம் எனப் புதுவிதி கூறியிருக்கிறார்இதைப் பின்பற்றிநான் பத்து தகவல்கள் என்று என் பதிவு ஒன்றனுக்குத் தலைப்பிட்டேன்.

  கஃறீது, முஃடீதுவாட்டடங்கண், முட்டாட்டாமரை முதலான கடினமான புணர்ச்சிகள்உயிரளபெடை, ஒற்றளபெடை, குற்றியலிகரம், மகரக்குறுக்கம் முதலிய சார்பெழுத்துகள், ஆகியவற்றைத் தமிழானது கைகழுவிவிட்டு எளிமைக் கோலம் பூண்டு பொலிவடைந்திருக்கிறதுஆனால், மேலும் எளிதாக்கலாம் என  நினைத்துஇலக்கணத்தை அறவே புறக்கணிப்பது மொழியைச் சீர்குலைக்கும். புதிய இலக்கண நூலை அடிப்படையாகக் கொண்டு பள்ளிப் பாடத்திட்டத்தைச் சீரமைப்பது அரசின் கடமை; இதனால் மாணவர்கள் நலன் பெறுவார்கள். புத்திலக்கணத்தைத் தழுவுவோம், காலத்தோடு ஒட்ட ஒழுகுவோம்.

                                                           ------------------------------------------------

 (படங்கள் உதவி - இணையம்)