Sunday 24 September 2017

ஓநாயின் இறப்பு

  
(19-ஆம் நூற்றாண்டுப் பிரஞ்சுக் கவிஞர்களுள் ஒருவர் விஞ்ஞி - Vigny -  அவரது La mort du loup - லா மோர் துய் லூ - என்ற கவிதையின்  மொழிபெயர்ப்பு)




ஓடின முகில்கள் ஒளிநிறை மதிமேல்
தீவிபத்தில் குறுக்கே விரைகின்ற புகைபோல்.
தோப்புகள் கருநிறத்தில் தொடுவானம் வரைக்கும்.
நடந்தோம் பேச்சின்றி சில்லென்ற புல்மீது,
அடர்த்தியாய் உயர்ந்த புதர்களின்  ஊடே.
துரத்திப் போன ஓநாய்க ளுடைய
பெரிய நகங்களின் சுவடுகள் தம்மைக்
கண்டோம் ஊசியிலை மரங்களின் கீழே.
தீட்டினோம் காதை, நடையை நிறுத்தி,  
மூச்சையும் அடக்கி.

ஒலியெதையும் எழுப்பவில்லை தோப்போ சமவெளியோ.
உயரத்தில் கத்திற்று காற்றுத் திசைகாட்டி மாத்திரம்.
ஏனெனில் மிகமேலே எழும்பிப்போய்க் காற்று
ஓங்குயர் கோபுரங்கள் தமைமட்டும் வருடிற்று.
கீழிருந்த மரங்களோ பாறைகள்மேல் சாய்ந்து
ஊன்றி முழங்கையை உறங்கினபோல் தோன்றின.
ஆகவே ஓசையொன்றும் கேட்கவில்லை வேட்டையருள்
மூத்தவர் தரைமீது படுப்பதுபோல் குனிந்து
நோக்கினார்இதுவரை யொருபோதும் தவறாகக்
கணிக்காத வல்லுநர் தெரிவித்தார் தாழ்குரலில்:
"புத்தம்புதுத் தடயங்கள் இருபெரிய ஓநாய்கள்
மற்றுமிரு குட்டிகளின் வலுமிக்க நகங்களது
சுவடுகள் தான்" என்றே. யாவரும் கத்திகளைக்
கைக்கொண்டு பளிச்சென்று ஒளிவீசும் துப்பாக்கி
களைமறைத் தடிமேல் அடிவைத்து நடந்தோம்
கிளைகளை விலக்கிமூவர் நின்றுவிட,
அவர்கள் நோக்கியதை நானறிய முயன்றேன்:

சிறுதொலைவில் கண்டேன் விலங்குருவம் நான்கு;
தலைவன் நின்றிருக்க அப்பால் மரமொன்றின்
அருகில் அதன்துணை ஓய்வுகொண் டிருந்தது;
ரொமுலுஸ்க்கும் ரெமுஸ்க்கும் தன்பாலை யீந்து
வளர்த்த தன்றோ ஓரோநாய்?
தெய்வமென ரோமர் வழிபட்ட அவ்விலங்கின்
சலவைக்கல் சிலைபோல நின்றதது.

ஆணோநாய் அமர்ந்தது பின்னங்கால் மடித்து
வளைந்த நகங்கள் மண்ணுள் புதைய.
அறிந்து கொண்டது: அபாயச் சூழ்நிலை,
அடைபட்ட பாதைகள், எதிர்பாராத் தாக்குதல்!
எழுந்து கவ்விற்று இருந்ததிலே மிகுதியான
துணிச்சல் கொண்ட நாய்தன்னின் குரல்வளையை;
உடம்பை ரவைகள் ஊடுருவும் நிலையிலும்
கூரிய கத்திகள் குறடுகள் போன்று
அகன்ற வயிற்றைத் துளைத்த போதிலும்
காலமான நாயினுடல் காலடியில் வீழ்ந்த
அந்தக் கடைசி  நிமிடம் வரைக்கும்
தளர்த்தவே யில்லை சிறிதேனும்
தன்னிரும்பு ஈறுகளின் இறுக்கத்தை.
பின்பதை விட்டுவிட்டுப் பார்த்தது எங்களை;

ஆழமாய் விலாவில் செருகிய கத்திகள்
சாய்த்தன புற்றரையில் குருதிவெள் ளத்தில்.
தொடர்ந்து பார்த்தபின் படுத்தது வாயில்
படர்ந்த குருதியை நக்கிய வாறே.
மூடி அகல்விழிமெளனமாய் இறந்தது.
துப்பாக்கி மேலே நெற்றியை வைத்து
சிந்தனையில் ஆழ்ந்தேன்ஓநாய்க்குக் காத்திருந்த
துணைவி குட்டிகள் ஆகிய மூன்றையும்
துரத்திப் போகும் முடிவெடுக்க முடியவில்லை;

என்னெண்ணம்: தன்துணைவன் தன்னந் தனியாய்ப்
போராட நிச்சயமாய் விட்டிராது அதன்பெட்டை
பிள்ளைகள் மட்டும் இல்லாமற் போயிருந்தால்.
அதன்கடமை அவைதம்மைக் காப்பாற்றி நன்றாகப்
பசிதாங்கிக் கொள்ளவும்காட்டினுக்கு உரியவரை
அழிப்பதற்கு மனிதனுடன் சேர்ந்துவரும் அடிமை 
விலங்குகள் அவனோடு இரைக்காகச் செய்துள்ள
ஒப்பந்தம் தன்னில் ஒருநாளும் சிக்காமல்
இருக்கவுங் கற்பித்தல்.

அந்தோ! மாந்தரெனும் மாண்புமிகு பேருடையோம் 
என்றாலும் நாணுகிறேன் எம்மை யெண்ணி.
பலவீனர் நாங்கள்! வாழ்வினின்றும் அதன்சகல
துயர்களில் இருந்தும் விடுபடும் வழியினை
நீங்கள்தான் அறிகின்றீர் மேன்மைமிகு விலங்குகளே!
என்னவாய் இருந்தோம் உலகில்?
எச்சமாய் எதைவிடுத் தேகிறோம் முடிவில்?
எண்ணிப் பார்த்தால் புரியும்:

"மெளன மொன்றே வலியதுமற்ற தெல்லாம் பலவீனம்."
காடுவாழ் பயணியே! அறிந்தேன் நன்றாக
உன்றனைநீபார்த்த இறுதிப் பார்வை
என்னிதயம் தைத்ததுஅதுகூ றிற்று:
"வனத்தில் பிறந்தநான் வானெட்டுந் தரமுள்ள
மனத்தின் திண்மையும் பெருமிதமும் பெற்றேன்;
மானிடா! இயலுமேல் உழைப்பால் சிந்தனையால்
அடையச்செய் உச்சத்தை உன்றன் உள்ளம்;
செருமல் அழுதல் பிரார்த்தனை செய்தல்
எல்லாமே சமமான கோழைச் செயல்;
உனக்கான பாதையில் உறுதியுடன் ஆற்று
கடினம்நிறை கடமைகளைகாலத்தின் முடிவில்
உற்றநோய் நோன்று உயிர்விடு மெளனமாய்
என்னைப் போல!"
===============================


Wednesday 6 September 2017

வெற்றிலை






  வெற்றிலைக் கொடியை அகத்தி மரத்தில் படர விடுவார்கள். அதற்கு விதை, காய் முதலானவை இல்லைஇலை மட்டுமே; ஆதலால் வெற்றிலை என்று மிகப் பொருத்தமாய்ப் பெயரிட்டார்கள். வெற்றிலை = வெறுமை + இலை. வெற்றிலை பயிரிடும் நிலப்பகுதி கொடிக்கால் எனப்படும்; கொடிக்கால் வேளாளர்கள் ஒரு தனிச் சாதி.
 வெற்றிலை பாக்கு இரண்டையுஞ் சேர்த்துக் குறிக்கிற வடசொல் 'தாம்பூலம்'; வெற்றிலை போடுதல் என்பதும் தாம்பூலந் தரித்தல் என்பதும் ஒன்றுதான். வெற்றிலை போடும் பழக்கம் எப்போது தொடங்கிற்று என்பது தெரியவில்லை. பழங்கால மன்னர்கள், பெருஞ்செல்வர்கள், தம் ஊழியர்களுள்அடப்பக்காரர் என்று ஒருவரை நியமித்திருந்தனர்;  தாம்பூலத்தைத் தயாராய் வைத்திருந்து, கேட்டவுடன் கொடுப்பது அவரது முழு நேரப் பணி.
  ஏறக்குறைய 80 ஆண்டுக்கு முன்புவரை, வெற்றிலை மெல்லும் பழக்கம் தமிழரைப் பிடித்தாட்டிற்று. வெற்றிலைத் தட்டில்லா வீடு இருந்ததில்லை; பாக்கு, சுண்ணாம்பு, புகையிலை, பாக்குவெட்டி ஆகியவையுங் கொண்ட வெற்றிலைத் தட்டைவந்த விருந்தினர் எதிரில் வைப்பார்கள், இப்போது காப்பி தருவதுபோல. ஏற்கனவே அவரது வாயில் தாம்பூலம் இருந்தாலும் அதைத் துப்பிவிட்டுப் புதிதாகப் போட்டுக்கொள்வார். Chain  smoker  மாதிரிசங்கிலிவெற்றிலையர் நிறையப் பேர் இருந்தனர். வாய் மென்றுகொண்டே இருக்கும், மாடு அசை போடுவது போன்று. பேச நேர்ந்தால், தலையை அண்ணாந்து, முகவாய்க்கட்டையைக் கொஞ்சம் முன்னுக்கு நீட்டிகீழுதட்டை உயர்த்திஎச்சில் வழியாதபடி, லாகவமாகப் பேசுவார்கள்; சில  சமயம் சரியாய்ப் புரியாது.
  வெற்றிலைச் செல்லம் என்ற பிரியப் பெயருடைய சிறு பெட்டியொன்றும் பயன்பாட்டிலிருந்ததுபுத்தக வடிவமுடைய மற்றும் வெண்கலத்தாலான அது, (செல்வர்களிடம் வெள்ளிப் பெட்டி) எல்லாவற்றையுந் தனித்தனியாக வைத்துக்கொள்வதற்கு ஏற்றவாறுசிறு சிறு தடுப்புகள் கொண்டதுபயணங்களின்போது அதுவும் கூடப் போகும்.

 இள வெற்றிலைகொழுந்து வெற்றிலை எனப்பட்டது:
  கொட்டைப்பாக்கு கொழுந்து வெத்திலை
  போட்டா வாய் சிவக்கும்
   பாடல் நினைவுக்கு வருமே! கொட்டைப் பாக்கு அல்லாமல் வெட்டுப்பாக்கு, துவர் பாக்கு, களிப் பாக்கு என்று வேறு பாக்குகளும் இருந்தன. விருப்பமான பாக்கை யெடுத்துப் பாக்கு வெட்டி என்னுங் கருவியால் சின்ன சின்ன தூள்களாக நறுக்கி வைத்துக்கொள்ள வேண்டும்; இரண்டு அல்லது மூன்று வெற்றிலைகளை ஒவ்வொன்றாய் எடுத்துக் காம்பைக் கிள்ளி யெறிந்துவிட்டுபின் பக்கத்தில் சுண்ணாம்பு தடவி, முன்புறம் பாக்குத்தூள், கொஞ்சம் புகையிலை, வைத்து மடக்கிப் பொட்டலம் போல் சுருட்டி வாயில் போட்டு மென்றால் சிறிது நேரத்தில் நாக்கு ரத்தச் சிவப்பு நிறங் கொள்ளும்.
  மெல்ல இயலாத முதியோர் என்ன செய்வதுஒரு சிறிய இரும்பு  உரலும் அதற்குப் பொருத்தமான உலக்கையும் உதவின. வெற்றிலை  வகையறாவை அதில் போட்டு இடித்தால் மிருதுவான செந்நிறக் கலவை உருவாகும்; அதை எடுத்து வாயிலிட்டுக் குதப்பிச் சுவைக்கலாம்.
  வெற்றிலை மட்டுமே விற்கிற கடைகள் இருந்தனநூறு நூறாய் அடுக்கி மடக்கிவாழை நாரால் கட்டி வைத்திருப்பார்கள். ஒவ்வொன்றும் ஒரு கவுளி எனப்பட்டது. மங்கல நிகழ்ச்சிகளுக்குக் கவுளி கவுளியாக வாங்குவர்.
  மூடியுடன் கூடிய சிறு டப்பியொன்றில் சுண்ணாம்பு இருக்கும்அதற்குச் சுண்ணாம்புக் கரண்டகம் என்பது பெயர்.
  சுருட்டுக் கடைகளில், சுமார் ஒரு முழ நீளமுடைய கருநிறப் புகையிலைகள் ஒவ்வொன்றையும் இரண்டாய் மடக்கி,  அடுக்கிஎப்போதும் ஈரப்பதத்தில், சாக்குப் போன்ற துணியால் மூடி வைத்திருப்பர். ஒரு நறுக்கு வேண்டுமெனக் கேட்டால்துணியை விலக்கிக் கத்தரிக்கோலால் மூன்று இஞ்ச் அளவுள்ளதாக ஒரு பகுதியை நறுக்கித் தருவர். 'புகையிலை விரித்தால் போச்சு!' என்பது பழமொழி; காரம் போய்விடுமாம்.
  செல்வர்களின் வீட்டுப் பெண்வயதுக்கு வந்தால்பூப்பு நீராட்டு விழாவையொட்டி, ஆடவர் மட்டுமே கலந்துகொள்ளும் ஜாலிக் கொண்டாட்டம் ஒன்று நிகழும்: இல்லத்தின் முன்கட்டில், வட்டமாக அமர்ந்திருக்கும் அவர்களின் நடுவிலே, ஓரிளந்தாசியாராவது ஒருவரை நெருங்கித் தாம்பூலம் வைத்த தட்டொன்றை நீட்டுவாள்; தாசி கையால் தாம்பூலம் பெறுதல் விபச்சாரத்துக்குச் சம்மதிப்பதைக் குறிக்குமாகையால், தட்டில் அவர் பணம் வைத்து வேறொருவரைச் சுட்டிக் காட்டுவார்; இவ்வாறு அவள் அங்குமிங்கும் சென்று தட்டு நீட்டுவதும் கூட்டத்தார் ஒருவரையொருவர் கிண்டல் செய்து மகிழ்வதும் இன்ப நிகழ்வாய்க் கருதப்பட்டது. அவளுக்கு நல்ல அறுவடையெனச் சொல்ல வேண்டுமோ? அது சிறிது சிறிதாய்க் கைவிடப்பட்டது.
  புகையிலைப் பழக்கத்தால் கன்னப் புற்று அபாயமுண்டு என அரசும் சமூக ஆர்வலர்களும் தொடர்ந்து எச்சரித்தமையால்தாம்பூலம் தரிப்போர் எண்ணிக்கை குறைந்ததுஆயினும் புகையிலை இல்லாமல் வெற்றிலை போடுபவர்கள் கணிசமாய் இருந்தார்கள். பரப்புரை நீடித்தது. பாரதிதாசன் பாடினார்.
ஒருவேளை அல்லது இருவேளை வெற்றிலை போடு – அதைப் போடாது  ஒதுக்கலும் நல்ல ஏற்பாடு"
என்று.
 கோயம்புத்தூர் ஆர். எஸ். கிருஷ்ண செட்டியார் மாற்றி யோசித்தார்: பாக்கைத் தூளாக்கி மணமூட்டிச் சிறிய ப்ளாஸ்டிக் பொட்டலங்களில் அடக்கி, 'அசோகா சுகந்த பாக்குத்தூள்' என விளம்பரஞ் செய்தார்; வாணிகம் விரைவில் சூடு பிடித்தது. பாக்கை நறுக்கும் வேலையைப் பாக்குவெட்டி இழந்தது. அமோகாரோஜாநிஜாம்மலர் என்றெல்லாம் பாக்குப் பொட்டலங்கள் சந்தையை ஆக்ரமித்தன. மேலும் முன்னேற்றம் ஏற்பட்டு, ஆயத்த ஆடை மாதிரிஆயத்த தாம்பூலமாகிய பீடா வந்தது. வெற்றிலை போடும் வழக்கம் காலப்போக்கில் அறவே மறைந்ததுகண்ட இடங்களில் எச்சில் துப்பியதால் பொதுச் சுவர்கள் காவிக் கறை படிந்து அசிங்கப்பட்டதும் ஒழிந்தது. இருந்தாலும் வாழ்க்கையில் தாம்பூல முக்கியத்துவம் தொடர்ந்து நீடிக்கிறது.
  திருமணத்தை உறுதி செய்வதற்கு வெற்றிலைத் தட்டு மாற்றிக்கொள்கிறோம்; நிகழ்ச்சிக்குப் பெயரே ' நிச்சய தாம்பூலம்'.  நெருங்கிய உறவினர்களைத் திருமணத்துக்கு அழைக்கநேரில் போய்த் தட்டில் அழைப்பிதழுடன் வெற்றிலை, பாக்கு, பணம் வைத்து நீட்டுகிறோம்அது 'வெற்றிலை பாக்கு வைத்தல்எனப்படுகிறது. மங்கள நிகழ்வுகளின் இறுதியில்,  'தாம்பூலப் பை' கொடுத்து வழியனுப்புகிறோம். இசை, நடனம் முதலானவற்றுக்கு ஒப்புக்கொள்ளும் கலைஞர்தாம்பூலத் தட்டில் வைத்துத் தருகிற முன்பணத்தைப் பெற்றுக்கொள்வார்அது, 'வெற்றிலை பாக்கு வாங்குதல்'.  அர்ச்சனை, பூஜைவரிசைகள்தாம்பூலம் இல்லாமல் நடக்குமா?
  உண்பொருளாயும் பயன்பட்ட ஒன்று, இப்போது மங்கலச் சின்னமாய் மாத்திரம் விளங்குகிறது. என்னே, வெற்றிலையின் மாட்சியும் வீழ்ச்சியும்!

                                                        ===========================